Published : Sep 02, 2025, 10:34 AM ISTUpdated : Sep 02, 2025, 10:46 AM IST
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வருவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் தொடர்வது தொடர்பாக வருகின்ற 5ம் தேதி தெரிவிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த சில மாதங்களாவே அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதன் வெளிப்பாடாக பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது, சட்டமன்றத்திற்கு சென்றால் கூட பழனிசாமி செல்லும் வழியைத் தவிர்த்து வேறு வழியில் செல்வது என தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரசாரம் கொங்கு மண்டலமான கோவையில் தான் பிரமாண்டமாகத் தொடங்கியது. அப்படிப்பட்ட கொங்கு மண்டலத்தையேச் சேர்ந்த முக்கிய தலைவரான செங்கோட்டையன் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
34
அதிமுக விழாவில் ஜெயலலிதா படத்திற்கு இடம் இல்லை
அதே போன்று அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விசாயிகள் சார்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த விழாவிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
மேலும் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோபிசெட்டி வழியாக சுற்றுப்பயணத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, வீட்டிற்குள்ளேயே இருந்த செங்கோட்டையன் பெயரளவுக்கு கூட பழனிசாமிக்கு வரவேற்பு விழா நடத்தாமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் வருகின்ற 5ம் தேதி மனம் திறந்து பேசப்போகிறேன். அது வரை அனைவரும் பொறுமையாக இருக்குமாறு செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.