புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு சூப்பர் செய்தி.! ஸ்மார்ட் கார்டு வீடு தேடியே வரப்போகுதாம்

First Published Sep 27, 2024, 7:32 AM IST

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தவர்களுக்கு முதல் கட்டமாக 80ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களுக்கான ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனிடையே புதிய கார்டு பெற்றவர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. 

ration shop

ரேஷன் கடையில் மானிய விலையில் உணவு பொருட்கள்

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நாடு முழுவதும் நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் விலையில்லாமல் அரிசி, மானிய விலையில் சக்கரை, கோதுமை, பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் அட்டை முக்கிய தேவையாக உள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. முழு நேர நியாய விலை கடைகள் 26 ஆயிரத்து 502 செயல்பட்டு வருகிறது.

மேலும் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் காலை அல்லது மாலை நேரத்தில் செயல்படும் வகையில் பகுதிநேர கடைகள் 10 ஆயிரத்து 452 என மொத்த கடைகளின் எண்ணிக்கை  36 ஆயிரத்து 954ஆக உள்ளது. இந்த கடைகள் மூலமாக மக்கள் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை மட்டுமே இந்த கடைகளுக்கு விடுமுறையானது விடப்படுகிறது. 

ration shop

அடிப்படை தேவையாக ரேஷன் கார்டு

இந்தநிலையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் பயன் பெற ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை,  மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு  தொடங்குவதற்கும் குடும்ப அட்டை கட்டாயமாகும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.

இது மட்டுமில்லாமல் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசால் வழங்கப்படும் பரிசு தொகைப்பை பெறுவதற்கும், மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்ற நேரத்தில் நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் பெறுவதற்கும் கட்டாயமாகும். குறிப்பாக மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு குடும்ப அட்டை முக்கிய தேவையாக உள்ளது. இதனையடுத்து தான் ஒரே நேரத்தில் 2,89,591 மக்கள் விண்ணப்பித்திருந்தனர்.

Latest Videos


Ration shop

புதிய கார்டுகள் கேட்டு 3 லட்சம் பேர் விண்ணப்பம்

இதனால் தமிழக அரசு கடந்த ஓராண்டுகளாக புதிய ரேஷன்கார்டு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக புதிய ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் என்ற காரணத்தால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும் ஸ்மார்ட் கார்டுகள் சரிபார்க்கும் பணி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது. அந்த வகையில் விண்ணப்பிக்கப்பட்ட 2,89,591 விண்ணப்பங்களில் இதுவரை 80,050 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு உள்ளது.

மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும்

இவர்களுக்கு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் முழுவதும் கார்டுகள் விநியோகிக்கப்பட்ட நிலையில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்களுக்கு உணவு பொருட்கள் இன்னும் ஒதுக்கவில்லையெனவும் அக்டோபர் மாதம் முதல் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிதாக ரேஷன் கார்டுகள் பெற்றவர்கள் வருகிற அக்டோபர் மாதம் முதல் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

மேலும் புதிய குடும்ப அட்டை தாரர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கவதற்கான நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.  இந்தநிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் அட்டைகளுக்கு 2,89,591 பேர் விண்ணப்பித்து காத்துள்ள நிலையில், 1 லட்சத்து 22 ஆயிரம் பேருக்குபுதிய ரேஷன் அட்டைகள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

69ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்

தற்போது முதல் கட்டமாக 80 ஆயிரத்து 50 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும்  99 ஆயிரத்து 300 பேரின் விண்ணப்பங்கள் சரியாக இல்லாத காரணத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும்,  68 ஆயிரத்து 291 பேரின் விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கும் என தெரிவித்தனர். 

click me!