Published : Aug 14, 2025, 08:34 AM ISTUpdated : Aug 14, 2025, 08:35 AM IST
கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் புதிய திருப்பமாக, சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் புழல் சிறையில் உள்ள மண்ணச்சநல்லூர் குணாவிடம் விசாரணை நடத்தினார்.
அதிமுக ஆட்சி காலத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம். இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து அதிகாலை வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
24
உயர்நீதிமன்றம்
இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிபிசிஐடிக்கு வசம் சென்றது. பல ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
34
உயர்நீதிமன்றம்
இதையடுத்து, ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளாக நியமித்தது. அதன்படி விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் புழல் சிறையில் உள்ள மண்ணச்சநல்லூர் குணா என்பவரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். ராமஜெயம் கொலை வழக்கு நீண்ட நாட்களாக விடை கிடைக்காத நிலையில் கொலை வழக்கில் தண்டனை பெற்று பாளையங்கோட்டையில் சிறைவாசியாக உள்ள சுடலையிடம் விசாரணை முடித்த கையோடு சென்னை புழல் சிறைக்கு டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீசார் வந்தனர். புழல் சிறையில் உள்ள மண்ணச்சநல்லூர் குணாவிடம் விசாரணையை தொடங்கி, சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.