Ramadoss Files Case Against Anbumani In Chennai High Court
தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளில் ஒன்றான பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே தொடர்ந்து மோதல் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு மேடையிலேயே ராமதாசும், அன்புமணியும் மோதிக் கொண்டபிறகு இருவரும் கட்சியில் தனித்தனியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தங்களுக்கு பிடித்தமானவர்களை கட்சியில் சேர்த்தும், பிடிக்காதவர்களை கட்சியில் இருந்து நீக்கியும் தந்தை, மகன் இருவரும் போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றனர்.
24
ராமதாஸ்-அன்புமணி மோதல்
ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் கட்சிக்குள் தங்களது ஆதரவாளர்கள் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறனர். இதனால் இருவரும் போட்டி போட்டு பாமக பொதுக்குழுவை கூட்டியுள்ளனர். அன்புமணி ராமதாஸ் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் இந்தக் கூட்டத்தின் மூலம் கட்சியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அன்புமணி முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி இருந்தது.
34
அன்புமணிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதே வேளையில் ராமதாஸ் ஆகஸ்ட் 17-ஆம் தேதி திண்டிவனம் அருகேயுள்ள பட்டானூரில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். கட்சியின் நிறுவனர் என்ற அடிப்படையில் தான் பொதுக்குழுவைக் கூட்ட அதிகாரம் உள்ளவர் என அவர் தெரிவித்துள்ளார். அன்புமணி கூட்டும் பொதுக்குழு செல்லாது என்றும் ராமதாஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராமதாஸின் ஆதரவாளரும், பாமக மாநில பொதுச் செயலாளருமான முரளி சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''பாமக தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிந்து விட்டது. மாநில தலைவரின் பதவிக்காலம் முடிந்ததால் நிர்வாகப் பொறுப்பு உள்ளிட்டவை நிறுவனருக்கே உண்டு. ஆகவே பாமக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டும் அதிகாரம் நிறுவனருக்கே உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
பாமக தொண்டர்கள் கவலை
பாமகவில் தந்தை, மகன் மோதல் நீதிமன்றம் வரை சென்றுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் போட்டி போட்டுக்கொண்டு கூட்டங்களை நடத்துவது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துமோ என்ற கவலையைத் தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.