தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் ஒற்றுமை அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பிளவுபட்ட அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெற முடியும். இதுதான் எனது நிலைப்பாடு. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்'' என்று தெரிவித்தார்.
24
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், ''எடப்பாடி பழனிசாமி தனது பிடிவாதத்தைக் கைவிட்டு அனைவரும் ஒன்றுசேர வேண்டும். கட்சியின் ஒற்றுமைக்காக செயல்பட வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக மட்டுமே தான் வாக்கு கேட்பேன். தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த இலக்கும் இல்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். அதிமுக எப்போதும் மக்கள் இயக்கம் தான். அதை யாராலும் சிதைக்க முடியாது'' என்று கூறினார்.
34
யார் முதல்வராக வர வேண்டும்?
மேலும் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய ஓபிஎஸ், ''இபிஎஸ்ஸை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது. யார் முதலமைச்சராக வர வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. கூட்டணிகள் குறித்த முடிவுகள் தேர்தல் காலத்தில் எடுக்கப்படும். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. தேர்தலுக்கு இன்னும் நாள் உள்ளது'' என்று தெரிவித்தார்.
இது தவிர திமுக மீது கரிசனம் காட்டுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், திமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சி குறித்து தினசரி அறிக்கை வெளியிட்டு வருவதாகவும், அவர்களின் குறைகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதாகவும் தெரிவித்தார். இறுதியாக தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ், ''தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அரசியல் ரீதியாகப் பேச வேண்டும். பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். விஜய்யின் சில கருத்துக்கள் அரசியல் நாகரிகத்திற்கு உகந்தது அல்ல'' என்றார்.