சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: செந்தில் பாலாஜிக்கு அமைதிப்படை அமாவாசை என்ற பெயர் பொருத்தமானது. ஐந்து கட்சிக்கு சென்று திமுகவிற்கு வந்துள்ளார். இனிமேல் எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியவில்லை. ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சி சின்னத்திலும் தேர்தலில் நின்றவர். இவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபு பேசி வருகிறார்.
25
DMK
இவர்கள் எல்லாம் அரசியல் வியாபாரிகள். உண்மையான விசுவாசி என்றால் ஒரே கட்சியில் இருக்க வேண்டும். கட்சி ஆரம்பித்த போது அதிமுகவில் சேர்ந்தேன். அந்த கட்சியை நேசித்ததால் எனக்கு பொதுச்செயலாளர் என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலையை கருதி வேடந்தாங்கல் பறவைகள் போன்று அவ்வப்போது வந்து செல்பவர்கள். இவர்கள் எல்லாம் எங்களைப் பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது என கடுமையாக விமர்சனத்தை இபிஎஸ் முன்வைத்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார். பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.
45
EPS
புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்.
அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண் என விமர்சனம் செய்துள்ளார்.