Mettur Dam : மேட்டூர் அணை நாளை 100 அடியை எட்டுமா.?கர்நாடகா அணைகளில் இருந்து இத்தனை லட்சம் கன அடி நீர் திறப்பா?

First Published Jul 26, 2024, 3:34 PM IST

 கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக எல்லையான ஒகேனக்கல் ஆற்றில் 85ஆயிரம் கன அடி அளவிற்கு நீர் வரத்து உள்ளது. எனவே நாளை மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேட்டூர் அணை நிலவரம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி பல்வேறு மாவட்டங்களை கடந்து தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வருகிறது. அங்கிருந்து  இருந்து ஒக்கேனக்கல் தருமபுரி, சேலம் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. டெல்டா விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கும் மேட்டூர் அணை. இந்த அணையில் தண்ணீர் இருந்தால் தான் விவசாயம் செழிக்க முடியும், இல்லையென்றால் வானம் பார்த்த பூமியாக விவசாய நிலத்திற்கு ஏற்படும்,

பொங்கி வரும் காவிரி

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரால்  டெல்டா பாசன பகுதிகளில் உள்ள  12 மாவட்டங்கள் பயன்பெறுவார்கள். இந்தநிலையில் கடந்த ஓராண்டாகவே மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்தது. எப்போதும் ஜூன் மாதம் திறக்கப்படும் மேட்டூர் அணை இந்தாண்டு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் தான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை மேட்டூர் அணையில் 35 முதல் 45 அடி உயரத்திற்கு மேட்டுமே தண்ணீர் இருந்தது. அதுவும் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் இயற்கையே விவசாயத்திற்காக கர்நாடகாவில் மழையை கொட்டியது

Latest Videos


காவரியில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் தண்ணீர் நிரம்பியது. இதனையடுத்து அந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் 10ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக நீரின் அளவு உயர்ந்தது. இன்று காலை 1 லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 1.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  
 

கிடு, கிடுவென உயரும் மேட்டூர் அணை

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடியும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது நாளை காலை ஒகேனக்கல் பகுதியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது வினாடிக்கு 84,000 கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 94  அடியாக உயர்ந்துள்ளது. நாளை அல்லது நாளை மறுதினத்திற்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!