Published : May 12, 2026, 03:27 PM ISTUpdated : May 12, 2026, 03:43 PM IST
Mannargudi MLA Kamaraj: மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ், சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால், அமமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அனைத்து கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் உரையாற்றினர். அப்போது மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் பேசுகையில்: முதல்வராக பொறுப்பேற்றவுடன் நீங்கள் கையெழுத்திட்ட மூன்று அறிவிப்புகளும் தமிழ்நாட்டுக்கு உதவும் திட்டங்கள். நீங்கள் நல்லாட்சி தர வேண்டும். 5 ஆண்டுகால சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும். 50 ஆண்டுகால ஆட்சிக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் இளைஞர்களும் நாங்களும் உங்களை நம்புகிறோம். உங்கள் அரசு தொடர்வதற்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
25
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
இந்நிலையில் சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அமமுகவின் ஒன்றை எம்எல்ஏவான காமராஜ் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் .S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.
35
அமமுகவில் இருந்து நீக்கம்
S.காமராஜ் அவர்களின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஆகவே, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
55
குதிரை பேர அரசியல்
இதனையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மன்னார்குடி எம்எல்ஏவான காமராஜ்: சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பேன். சட்டமன்றத்தில் முதல்வரை புகழ்ந்து பேசுவது தவறா? கடந்த 10 ஆண்டுகாலமாக அமமுகவிற்கு உழைத்தேன். அதற்கு கிடைத்த பரிசாக கட்சியிலிருந்து நீக்கத்தை எடுத்துக்கொள்கிறேன். தலைமை முடிவு எடுக்கும்போது கட்டுப்பட்டுத்தான் ஆகணும். ஒன்றும் வருத்தமில்லை என தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த சில நாட்களில் தவெகவுக்கு அமமுக எம்எல்ஏவான காமராஜ் ஆதரவு தெரிவித்துள்ளதாக வீடியோ வைரலானது. தனது கட்சி எம்எல்ஏவை கடத்திவிட்டதாக விஜய் குதிரை பேர அரசியல் நடத்துவதாகவும் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.