தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களில் அபார வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை உதவியுடன் தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். தவெக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுப்பதற்கு முன்பாக, தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராதவிதமாக பரம எதிரிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளதகாவும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் முதலில் தகவல் பரவியது.
திமுக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை
பின்பு திமுகவும், அதிமுகவும் கைகோர்த்து விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக அமர்த்த முடிவு செய்து இருந்ததாகவும் தகவல்கள் கூறின. திமுக, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பேபியும் தெரிவித்து இருந்தார். இதேபோல் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்களும் இந்த கருத்தை தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம், 'இபிஎஸ் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து முதல்வராக முயன்றார்' என்று இன்று காலை அதிரடியாக தெரிவித்து இருந்தார்.