ஒரு கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைப்பவனையும், தலைமைக்கு விசுவாசமாக அமைதியாக இருப்பவனையும் இந்த அரசியல் உலகம் கொண்டாட மறுக்கிறது என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் முகநூல் பக்கத்தில் பரபரப்பு பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அரசியல் களத்தில் பல ஆண்டுகளைக் கடந்த எனக்கு ஒரு கசப்பான உண்மை புரிந்திருக்கிறது. இங்கே நல்லவர்களை யாருக்கும் பிடிப்பதில்லை. நேர்மையாக இருப்பவர்களை 'இளிச்சவாயர்கள்' என்றும், தந்திரமாக இருப்பவர்களை 'கெட்டிக்காரர்கள்' என்றும் போற்றும் ஒரு விசித்திரமான உலகமாக இது மாறிவிட்டது. ஒரு கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைப்பவனையும், தலைமைக்கு விசுவாசமாக அமைதியாக இருப்பவனையும் இந்த அரசியல் உலகம் கொண்டாட மறுக்கிறது. ஆனால், அதே நேரத்தில் ஒருவன் மாற்றுக்கட்சிக்குச் சென்று, அங்கிருந்து கொண்டு தன் தாய் கழகத்தை வசைபாடிவிட்டு, பிறகு ஒரு பெரிய பதவியைப் பேரம் பேசிப் பெற்றுக்கொண்டு மீண்டும் உள்ளே வந்தால், அவனைத் தான் இந்த இயக்கங்கள் கொண்டாடுகின்றன. வேடிக்கை என்னவென்றால், மக்களும் அத்தகையவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற வைக்கிறார்கள்.