TNPSC: அதெல்லாம் வதந்தி! யாரும் நம்பாதீங்க! குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி கொடுத்த முக்கிய தகவல்!

First Published Oct 13, 2024, 4:53 PM IST

TNPSC Group 4:   சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் தேர்வு நடத்தப்பட்டு நிரப்படுகிறது. இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியாகி 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் எழுதினர். குரூப் 4 தேர்வுகளை பொறுத்த வரை நேர்முகத்தேர்வு இல்லை. இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆஃப் மதிப்பெண்ணை பெற்றால் ஆவண சரிபார்ப்புக்கு பின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி 480 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

Latest Videos


ஆனால், காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு பிரிவில் 2,208 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,704லிருந்து 8,932ஆக உயர்ந்த்தப்பட்டது. 

tnpsc

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குறைதீர் அழைப்பு மையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு குரூப் 4, 2024 இல் போதுமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா? கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2022ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3,380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2024ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8,932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4,466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே 2024ம் ஆண்டு குரூப்  4 தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன. எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளது.

click me!