நாகை டூ இலங்கை கப்பல் பயண அனுபவம் எப்படி இருக்கும் தெரியுமா.? என்ன என்ன அழகிய காட்சிகளை பார்க்கலாம்.?

First Published Sep 6, 2024, 8:30 AM IST

நாகைக்கும- இலங்கைக்கும் இடையே மீண்டும் தொடங்கிய கப்பல் போக்குவரத்து, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கட்டணம், ரத்து செய்யப்படும் பயணங்கள் போன்ற காரணங்களால், பயணிகள் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் 4 மணி நேர கடல் பயணத்தில் கடல் அழகின் இயற்கையை ரசிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.  

தனுஷ்கோடி டூ இலங்கை

இந்தியாவின் கடைசி எல்லையான தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் 30 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடல் பகுதியாகும். இங்கிருந்து தினந்தோறும் சரக்கு மற்றும் பொதுமக்கள் கப்பல் சேவை இயக்கப்பட்டு வந்தது. பல வர்த்ததகங்களை கொண்ட இந்த இடத்தில் 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய புயலால் அந்த நகரமே சின்னாபின்னமானது. துறைமுகம் இருந்ததற்கான அடையாளமே காணப்படாத நிலை உருவானது. பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.

இதனால் கப்பல் போக்குவரத்து தடைபட்டது.  இதனை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக அடுத்து, அடுத்து கப்பல் போக்குவரத்திற்காக எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை. 

இலங்கைக்கு பாலம் சாத்தியமா.?

இந்தநிலையில்  தனுஷ்கோடியில் இருந்து இலங்கை இடேயே 13 மணல் தீடைகள் உள்ளது. அழகிய தீவுகளை கொண்ட இந்த பகுதியில் இந்தியாவிற்கு சொந்தமாக 6 தீடைகளும், இலங்கைக்கு சொந்தமாக 7 தீடைகளும் உள்ளது. இங்கு அரிய வகை மீன்கள், பவள பாசிகள், ஏராளமாக உள்ளது.  இதனிடையே இந்தியா- இலங்கை இடையே பாலம் கட்ட வேண்டும் என அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

 ‘சிங்களத் தீவினுக் கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்று மகாகவி பாரதியார் கண்ட கனவு எப்போது பழிக்கும் என மக்கள் ஆர்வமோடு காத்துள்ளனர். இந்த பாலம் அமைத்தால் சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் இலங்கையை சொந்த கார்களின் மூலம் சென்று சேர்ந்து விடலாம். இதற்கான சாத்திய கூறுகளையும் இரு நாட்டின் அரசும் ஆலோசித்து வருகிறது.

Latest Videos


நாகை டூ இலங்கை கப்பல் போக்குவரத்து

இதன் முதல் படி தான் கப்பல் போக்குவரத்து தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையேற்று மத்திய அரசு திட்டங்களை ஆய்வு செய்தது. இதன் படி ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கலாமா அல்லது நாகையில் இருந்து இயக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு இறுதியாக நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த கப்பல் சேவையை கடந்த வரும் அக்டோபர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.  செரியாபாணி என்ற பெயரில் கப்பல் இயக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்டணம் அதிகமாக இருந்ததால் கப்பலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் அடுத்தடுத்து ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக கப்பல் இயக்கும் சேவை முற்றிலும் தடைபட்டது. 

கப்பலின் வசதிகள் என்ன.?

இதனையடுத்து மீண்டும் கப்பல் சேவையே இயக்க திட்டம் வகுக்கப்பட்டடது. ஏற்கனவே செரியாபாணி என்ற பெயரில் கப்பல் இயக்கப்பட்ட நிலையில் அந்த கப்பலுக்கு பதிலாக சிவகங்கை என்ற பெயரில் வெறொரு கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு மே 13ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் சோதனை ஓட்டம் முடிவடையாத காரணத்தில் மீண்டும் கப்பல் சேவை தடைபட்டது. இதனிடையே மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கப்பல் சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இலங்கைக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பால் ஏராளமான பயணிகள் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து கப்பல் பயணத்திற்கான முன்பதிவும் தொடங்கியது.  பல்வேறு வசதிகளோடு  தயாரிக்கப்பட்டுள்ள கப்பலில் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டது. 

முன்பதிவு செய்வது எப்படி.?

கப்பலில் பயணிக்க www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.  ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டியுடன் ஆயிரத்து 500 ரூபாயும்,, சாதா இருக்கைக்கு 5 ஆயிரம் ரூபாயுடன் ஜிஎஸ்டியுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் 25 கிலோ வரை எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

முதல் சேவையின் போது 44 பயணிகளும், இரண்டாவது நாள் பயணத்தில் 30 பயணிகளும், 3ஆம் நாள் சேவையில் 20 பயணிகளும் பயணம் மேற்கொண்டனர். பயணிகளிடம் இந்த கப்பல் போக்குவரத்து மீது நம்பிக்கை இல்லாத காரணத்தாலையே மக்கள் அதிகமாக வரவில்லையென கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் கப்பல் சேவை ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த பயணத்தை நம்பி சுற்றுலா செல்ல அச்சம் அடைந்துள்ளனர். 


கடலின் அழகை ரசிக்கும் மக்கள்

இந்தநிலையில் நாகை முதல் இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கடல் பயணம் எப்படி இருக்கும் என பயணம் செய்த சுற்றுலா பயணிகள் கூறுகையில் அற்புதமான பயணமாக இந்த கப்பல் பயணம் அமைந்துள்ளது. கடல் மேல் பயணம் செய்ய விரும்பும் மக்கள் இந்த பயணத்தை பயன்படத்திக்கொள்ளலாம். மேலும் இந்த 4 மணி 30 நிமிட கப்பல் பயணத்தில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடல், ஒரு சில பகுதிகளில் செல்லும் போது தீவுகளையும் பார்க்க முடியும், கடலில் மீனவர்கள் மீன்பிடிப்பது, வாய்ப்பு கிடைக்காதல் துள்ளி குதிக்கும் டால்பின் மீன்களையும் பார்க்கலாம் என சுற்றுலா பயணிகள் இயற்கையை விவரித்தனர்.  இது மட்டுமில்லாமல் இயற்கையின் வரமாக இலங்கை உள்ளது. அங்கு அழகிய கடற்கரை, யாழ்ப்பானம் உள்ளிட்ட சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் இருப்பதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். 

ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

விமான பயணத்தை விட கப்பல் பயணம் சிறப்பாக இருந்து வருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்து வரும் நிலையில், இந்த கப்பல் போக்குவரத்து மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லாத நிலை நீடித்து வருகிறது. நேற்று இலங்கையில் இருந்து நாகைக்கு கப்பல் போக்குவரத்துக்கு தயாராகி கொண்டிருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளும் கப்பலில் ஏறி அமர்ந்து விட்டனர். அப்போது கப்பலில் போதிய எரிபொருள் இல்லாததால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு வர திட்டமிட்டிருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதுபோன்று தடையில்லாமல் கப்பல் சேவை இயக்கப்பட்டால் மக்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது. 
 

click me!