Durai Rain: வளைகுடா நாடுகளில் மார்ச் 23 முதல் 28ம் தேதி வரை அதீத கனமழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் கெடு விதித்திருந்தார். அதற்கு ஈரான் உடன்படவில்லை. இதனால் அந்நாட்டின் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்து வருகின்றன. இதில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, அமீரகம், பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
26
அதீத கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது வளைகுடா நாடுகளில் மார்ச் 23 முதல் 28ம் தேதி வரை அதீத கனமழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
36
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மார்ச் 23 முதல் 28 வரை துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாற்று சிறப்பு மிக்க கனமழை பெய்ய உள்ளது. துபாயின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு சுமார் 100 மி.மீ மட்டுமே. மிகக் குறுகிய காலத்திற்குள் பெய்யும் தீவிர மழை நிகழ்வுகள் மூலம், ஓராண்டுக்குரிய மொத்த மழைப்பொழிவும் வெறும் 2 முதல் 3 நாட்களுக்குள்ளேயே கொட்டித் தீர்க்கும் நிலை உருவாகி உள்ளது. இப்படி இயல்புக்கு மீறி மழை பெய்வது இது முதல் முறை கிடையாது.
2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 நாட்களில் இல்லாத கனமழை (அல் ஐன் - 190.4 மி.மீ). 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆண்டுகளில் இல்லாத கனமழை (புஜைரா - 255.2 மி.மீ). 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 75 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனை மழை (அல் ஐன் - 254.8 மி.மீ). ஐக்கிய அரபு அமீரக மழை வரலாற்றிலேயே ஒரு சாதனையை நிகழ்த்தியது. துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரத்தில் 142 மி.மீ மழை பதிவானது. இந்த வரிசையில் 2026 மார்ச் 23 முதல் 28ம் தேதிகளில் பெய்ய இருக்கும் மழை, 2024-ன் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய ஒட்டுமொத்த மழையும் வெறும் 2 முதல் 3 நாட்களில் கொட்டித் தீர்க்கப்போகிறது என தெரிவித்துள்ளார்.
56
என்ன காரணம்?
மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கு திசை இடையூறு மற்றும் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்படும் காற்று விலகல் ஆகியவையே இந்த பெரிய மழைக்குக் காரணம். இது மேகங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைபெற்று அதிக மழையை தர உதவும் கிளாசிக் சூழலாகும். எனவே, மார்ச் 23 முதல் 27 அல்லது 28 வரையிலான நாட்களில் 150 முதல் 200 மி.மீ வரையிலான மழைப்பொழிவை நாம் எதிர்பார்க்கலாம்.
66
போக்குவரத்து முடங்கும் அபாயம்
தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்படலாம். சாலை மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது. கட்டமைப்பு சேதம்: குறுகிய நேரத்தில் பெய்யும் அதீத மழையால் வடிகால் மற்றும் இதர கட்டமைப்புகள் சேதமடையலாம். மார்ச் மாதத்தில் நிகழும் இந்த நிகழ்வு, ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் மிக முக்கியமான மழை நிகழ்வுகளில் ஒன்றாகப் பதிவாகலாம். ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாமல், பஹ்ரைன், தோஹா, மஸ்கட், சவுதி அரேபியாவின் பல பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.