Delta Weatherman: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், சென்னை போன்ற நகரங்களில் 107 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. இருப்பினும், சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் தொடங்கியது. ஏற்கனவே, வெயில் பாடாய்படுத்திக் கொண்டிருந்த நிலையில், கத்திரியும் தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் வெளியில் தலைக்காட்டா முடியாத அளவிற்கு வெயில் கூட்டெரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையில் 107 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் 17 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
26
17 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்
வேலூர், திருத்தணியில் தலா 106 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி, தொண்டி, மதுரை விமான நிலையத்தில் தலா 102 டிகிரி, நாகப்பட்டினம், மதுரை மாநகரில் தலா 101 டிகிரி, காரைக்கால், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, பாளையங்கோட்டை, ஈரோடு, கடலூரில் தலா 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் அவ்வப்போது மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
36
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை
இந்நிலையில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தீவிரமடையும் என டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
56
வடமாவட்டங்களில் அதிகரிக்க கூடும்
இதுதொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில்: மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்கு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மே துவக்கம் முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை பெய்து வந்த நிலையில் தற்போது மேற்கு காற்று வலுபெற்று வருவதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க கூடும்.
66
குடைகள் பயன்படுத்துவதும் அவசியம்
வரும் நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 39° முதல் 41° வரை பதிவாக வாய்ப்புள்ளது. வேலூர், திருத்தணி போன்ற பகுதிகளில் 42 டிகிரி வரை செல்லக்கூடும். மாலை/இரவு ஆங்காங்கே ஒருசில இடங்களில் இடி மழை பதிவாக கூடும். வடதமிழகத்தில் வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் அவசியமின்றி வருவதை தவிர்ப்பது நல்லது. நீர்சத்துடைய பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்வதும், வண்ணநிற குடைகள் பயன்படுத்துவதும் அவசியம் என அறிவுறுத்தியுள்ளார்.