
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 2019-இல் இருந்து நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தலிலும் நமக்கு, வெற்றி மேல் வெற்றிதான்! அதுவும் சாதாரண வெற்றி அல்ல; சதிகளை முறியடித்த சரித்திர வெற்றி! ஒவ்வொன்றும் எதிரிகளை கலங்கடிக்கும் வெற்றி! இந்தியா முழுவதும் எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட், Black and Red-தான் – கருப்பு-சிவப்புதான்!
2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான்! ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ‘ஸ்டார்ட்’! இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை! மிகவும் அடக்கத்துடன், மிகுந்த பணிவுடன், நம்முடைய அரசு செய்திருக்கும் சாதனைகள் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்! அனைத்துக்கும் மேல், உடன்பிறப்புகளான உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன். உங்களைப் போன்ற நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கும்போது, வெற்றியைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிக்கத் தேவையில்லை! உங்களை வழிநடத்தி, உங்களுக்கான ‘டாஸ்க்’-ஐ ஒப்படைத்தாலே போதும்! மீண்டும் உதயசூரியன் ஆட்சி உறுதி! உறுதி! உறுதி!
2021-இல் இருந்ததைவிட, தமிழ்நாடு முழுவதும் நமக்கான வரவேற்பும், ஆதரவும் இப்போது கூடியிருக்கிறது. 2021 தேர்தலில் ‘இதையெல்லாம் செய்வோம்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம்! இப்போது, சொன்னதையும் தாண்டி செய்து கொண்டிருக்கிறோம். அதனால், கெத்தாக மக்கள் முன் நிற்கிறோம்! அதனால், மெத்தனமாக இருக்காமல் களத்தில் தொடர்ந்து உழைத்தால், சென்ற முறை அடைந்ததை விட பெரிய வெற்றி, 100 சதவிகிதம் சாத்தியம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வாங்கிய வாக்குகளை சட்டமன்றத் தொகுதிவாரியாகப் பார்த்தாலே, தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 2026-இலும் 200 தொகுதிகளுக்கு மேல் நாம்தான் வெல்லப் போகிறோம்! அதற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.
நம்முடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் நிச்சயமாக ஏதாவதொரு வகையில் பயன்பெறும்படி நம்முடைய திட்டங்கள் அமைந்திருக்கிறது. அவை அனைத்தும் அவர்கள் வீட்டின் ஒரு அங்கமாக இருப்பது போன்று நோட்டீஸ் அடித்துக் கொடுங்கள்! அடுத்த 2 மாதம் எந்தப் பக்கம் திரும்பினாலும், எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும், அங்கு D.M.K. Brand-தான் தெரிய வேண்டும்! மறந்துவிடாதீர்கள். தெருமுனைக் கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்கள் மற்றும் மகளிரை கழகத்தை நோக்கி அதிக அளவில் ஈர்க்க வேண்டும்! ஏன் என்றால், அவர்களுக்காகத்தான் இந்த 5 ஆண்டுகளில் நிறைய செய்திருக்கிறோம்! ஒவ்வொரு தனி மனிதரின் கோரிக்கையையும், எண்ணத்தையும் நம்முடைய திட்டங்கள் மூலமாக செயல்படுத்திக் கொடுத்திருக்கிறோம்!
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
* காலை உணவுத் திட்டம்
* புதுமைப் பெண் திட்டம்
* தமிழ்ப்புதல்வன் திட்டம்
* நான் முதல்வன் திட்டம்
* இல்லம் தேடிக் கல்வி திட்டம்
* எண்ணும் எழுத்தும் திட்டம்
* குறு சிறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டம்
* கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
* உங்களுடன் ஸ்டாலின்
* நலன் காக்கும் ஸ்டாலின்
* மக்களைத் தேடி மருத்துவம்
* இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48
* பாதம் காப்போம்
* இதயம் காப்போம்
* கலைஞர் கைவினைத் திட்டம்
* ஊட்டச்சத்தை உறுதி செய்
* மகளிர் விடியல் பயணம்
* கலைஞர் கனவு இல்லம்
* அன்புக் கரங்கள் திட்டம்
* அன்புச் சோலை திட்டம்
* தோழி விடுதிகள்
* மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம்
* உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி நியமனம்
* முதலமைச்சர் கோப்பை
* அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்
* தொல்குடித் திட்டம்
* டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்
* பேராசிரியர் அன்பழகனார் கல்வி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
* பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்
* அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
* முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
* முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டுத் திட்டம்
* கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம்
* உங்க கனவ சொல்லுங்க
* 3000 ரூபாய் பொங்கல் தொகுப்பு –
இளைக்கிறது, அவ்வளவு திட்டங்கள்… இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் நினைவூட்டுங்கள்.
மக்கள்நலத் திட்டங்கள் எந்தத் தடையும் இல்லாமல் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் அட்வான்ஸாக செயல்படுவதுதான், இப்போது, “Talk of the நேஷன்!”
தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் பேசுவதற்கு துணிவில்லாமல் - முதுகெலும்பு இல்லாமல், கொத்தடிமைச் சேவகம் செய்துகொண்டு இருக்கும் பழனிசாமி, எனக்கு சவால் விட்டிருக்கிறார்.
எந்த பழனிசாமி? இன்றைக்கும், ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அடையாளமாக, சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டு இருக்கும் வீடியோவிற்கு சொந்தக்காரரான பழனிசாமி!
பழனிசாமி அவர்களே... மாண்புமிகு பழனிசாமி அவர்களே... தவழ்ந்து தவழ்ந்து, ஊழல் குற்றவாளியான அம்மையார் சசிகலா காலில் விழுந்து, பதவியைப் பெற்று, அவருடைய காலை வாரிவிட்டு, “நீ எனக்கு பதவி கொடுத்தியா” என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்டீர்களே? இல்லை என்று மறுக்க முடியுமா?
சட்டம் - ஒழுங்கு பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தார்மீக உரிமையாவது இருக்கிறதா? உங்கள் கட்சியின் உண்மையான பொதுச்செயலாளராக இருந்த, அம்மையார் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை - கொள்ளை, அதைத் தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள், இதையெல்லாம் மறக்கடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
பொல்லாத ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி என்பதற்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளே சாட்சியாக ஆறாத வடுவாக இருக்கிறதே?
ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அமைதியாக ஊர்வலம் சென்ற, அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சொல்லிவிட்டு, டி.வி.யைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று நாடகம் போட்டது, மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், அப்பாவும் மகனும் அடித்து கொல்லப்பட்டப்போது, அவர்கள் உடல்நலமில்லாமல் இறந்ததாக, கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் சொன்னீர்களே... உங்களுடைய அந்த கல்மனதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்தீர்களா?
ஊழலின் ஊற்றுக்கண்ணான அ.தி.மு.க.வின் பாராம்பரியத்தை காப்பாற்ற, உறவினர்களுக்கு டெண்டர்களை அள்ளிக் கொடுத்துவிட்டு, வழக்கு வந்தவுடனே, தமிழ்நாடு முழுவதும் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்டினீர்களே... மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?" என காட்டமாக கேள்வி எழுப்பினார்.