PMK Chithirai Full Moon conference: பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநாட்டிற்கு 47 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
பாமக சார்பில் வரும் 11ம் தேதி செங்கல்பட்ட மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரி ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
24
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதில், சித்ரா பவுர்ணமி நாளில் பாமக மாநாடு நடத்துவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். 2013ம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரம், 20% இட ஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டிருந்தார். ஆகையால் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மாலா மற்றும் அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
34
மாநாட்டுக்கு 47 நிபந்தனைகள் விதித்த தமிழக அரசு
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாநாடு நடக்கும் நாளில் கிழக்கு கடற்கரை சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறிய வீடியோவை நீதிபதிகளிடம் காண்பித்தனர். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்: மாநாட்டுக்கு 47 நிபந்தனைகளுடன் மே 5ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து பாமக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காவல் துறை விதித்துள்ள அத்தனை நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும். எந்த அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும் என்று உறுதியளித்தார். குறிப்பாக மாநாட்டின் போது பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும். மாநாடும் சித்ரா பவுர்ணமி விழாவும் அமைதியாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜிக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.