Published : Mar 29, 2025, 10:29 AM ISTUpdated : Mar 29, 2025, 10:43 AM IST
மத்திய அரசு 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ.336 ஆக உயர்த்தியுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.4000 கோடியை பாஜக அரசு இழுத்தடிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 740 மாவட்டங்களில் 13.42 கோடி பயனடைகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 17 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.319ஆக இருந்த 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் தற்போது ரூ.336 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படகிறது.
24
4000 கோடி நிலுவைத்தொகை
இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய சுமார் 4000 கோடி ரூபாயை பாஜக அரசு தராமல் இழுத்தடுத்து வருகிறது. இதனை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 1,170 இடங்களில் 100 நாள் வேலைக்குச் செல்வோரை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் பாஜக அரசு இறங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு.
உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.