பாம்பன் பாலத்தையும், தனுஷ்கோடியையும் இனி கப்பலில் சென்றும் பார்க்கலாம்.! புதிய சேவை தொடங்கப் போகுது தெரியுமா?

First Published Sep 8, 2024, 1:29 PM IST

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் புதிய சுற்றுலா அனுபவத்தை அளிக்க கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் பாம்பன் பாலம், தனித்தீவுகள் மற்றும் பவளப்பாறைகள் போன்ற இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழலாம்.

ராமேஸவரத்தின் சுற்றுலா இடங்கள்

ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இயற்கை அழகு கொண்ட பகுதியாகும். தனித்தீவாக உள்ள ராமேஸ்வரம் ஆன்மிக தளமாக விளங்குகிறது. இங்கு ராமநாதசுவாமி கோயில், கோதண்ட ராமர் கோயில், ராமர் பாதம், நம்பு கோயில் போன்ற பல கோயில்களை சுற்றியுள்ள நகரமாகும். காசிக்கு சென்றவர்கள் ராமேஸ்வரத்திற்கு வந்து தங்களது பாவங்களை விட்டு செல்வார்கள். அப்படி பெயர் பெற்ற பூமி தான் ராமேஸ்வரம், அங்குள்ள அக்னீதீர்த்த கடற்கரை மட்டுமில்லை ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீர்த்தங்களுக்காகவும் வட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.   

தனுஷ்கோடியின் அழிந்த கட்டிடங்கள்

இது மட்டுமில்லாமல் ராமேஸ்வரத்தில் இருந்து 25கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய புயலில் சிக்கி அந்த ஊரே இல்லாமல் சென்று விட்டது. அங்கிருந்த துறைமுகம், ரயில் நிலையம், தேவாலயம் போன்றவை தற்போது எழும்புக்கூடாகவே காட்சியளிக்கிறது. தனுஷ்கோடியில் இருந்து 30 கிலோ மீட்டர் கடல் மைல் தூரத்தில் உள்ளது இலங்கை. இதன் காரணமாக இந்திய கடற்படை அந்த பகுதி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
 

Latest Videos


அப்துல் கலாம் நினைவிடம்

இது மட்டுமில்லாமல் ராமேஸ்வரம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் மற்றொரு இடம் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் அவர் வாழ்ந்த வீடாகும். இந்த இடத்தை பார்ப்பதற்காகவே பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மற்றொன்று பாம்பல் பாலம்,  ராமேஸ்வரம் பகுதியையும்- மண்டபத்தையும் இணைப்பது இந்த பாம்பன் பாலம் தான்.  

பாம்பன் ரயில் பாலம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ரயில் பாலம் இல்லாத காலத்தில் படகு மூலமாகவே மண்டபம் பகுதிக்கு செல்லும் நிலை இருந்தது. இந்த நிலையில் தான் 1914ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டை கடந்தும் சேவை புரிந்து வருகிறது. 1990ஆம் ஆண்டில் தான் பேருந்து போக்குவரத்திற்காக பஸ் பாலமும் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் இருந்து கடலில் மீனவர்கள் மீன்பிடிப்பதையும், ரயில் பாலத்தில் ரயில் செல்வதை பார்க்கவே சுற்றுலா பயணிகள் கூட்டம் பாம்பன் பேருந்து பாலத்தில் குவிவார்கள்.

இப்படி பல இயற்கை அழகை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறை சார்பாக சிறிய, சிறிய படகு சேவை இயக்கப்பட்டு வருகிறது. பாம்பன் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து குருசடை தீவிற்கு படகு இயக்கப்படுகிறது. இந்த படகில் பயணம் செய்ய ஒருவருக்கு 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

சிறிய கப்பல் சேவை

இதே போல மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் சிறிய படகு சேவை இயக்கப்படுகிறது.   இந்தநிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கி சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி இனி வரும் காலங்களில் பாம்பன் பாலத்தை கப்பலின் மூலம் அருகில் சென்று பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் ராமேஸ்வரத்தை சுற்றி பல இடங்களில் தனித்தீவுகள் உள்ளது இந்த பகுதியையும் பொதுமக்கள் பார்வையிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடல் அலைகளை தடுக்கும் பவளப்பாறைகளும் அதிகளவு காணப்படுகிறது அந்த இடத்தையும் விரைவில் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அசின் கடல் சார் வாரியம் கப்பல் சேவை இயக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Pamban bridge, Indian Railways

சுற்றுலா பயணிகளை கவர திட்டம்

அதன்படி அதிகபட்சம் 50 பேர் பயணம் செய்யும் வகையில் மூன்று மணி நேரத்திற்கு மிகாமல் இந்த சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்குவதன் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாடு பயணிகளை ஈர்க்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்களின் பொருளாதாரம் மேம்படுவதற்கும் இந்த திட்டம் வாய்ப்பாக அமையும் என கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் இந்த திட்டத்தில் படகு சேவையை இயக்குபவர்கள் முன்வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் கப்பல் சுற்றுலா

அதன் படி கப்பலின்  நீளம் 60 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், அகலம் 18 மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 50 பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் கப்பல் சேவை இயக்கப்படவுள்ளதாகவும இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் அறிவித்துள்ளது. 

click me!