தமிழகத்தில் கடந்த மே 4ம் தேதி முதல் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்து வருகின்றன. 2026 சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. திமுக கூட்டணி கட்சிகள் உதவியுடன் தவெக ஆட்சியில் அமர்ந்தது. விஜய் முதல்வராக பொறுப்பெற்றார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அதாவது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பொங்கியெழுந்தனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தனியாக கூட்டமும் நடத்தினார்கள். இதனால் கோபம் அடைந்த இபிஎஸ் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலரின் பொறுப்புகளை பறித்தார். இந்த நிலையில், தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதாவது மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் 3 பேரும் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் ஆவர். இவர்கள் 3 பேரும் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்கள் ஆன வெறும் 21 நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.