TN Politics: சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!

Published : May 25, 2026, 02:45 PM IST

TN Politics:: தமிழகத்தில் தொடர் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தவெக அரசு மீது உதயநிதி, இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளனர்.

PREV
14
கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் அருகே கண்ணம்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த கார்த்திக் (33) என்பவன் கைது செய்யப்பட்டான். அவனுக்கு உடைந்தையாக இருந்த அவனது நண்பன் மோகன்ராஜ் என்பவனும் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொலை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட விஜய்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஜோசப் விஜய், தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினார். வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

24
உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

இந்த நிலையில், தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்துள்ளதாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.

34
விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்?

கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.

முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.

நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

44
எடப்பாடி பழனிசாமியும் கண்டனம்

இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது. முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்!

தனி உலகத்தில் வாழ்கின்றனர்

“முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?” என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா? உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories