
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இதனால் வீடுகளில் ஃபேன், ஏசி எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதனிடையே கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்கள் குளுமையான சுற்றுலா இடங்களுக்கு செல்லலாம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர். குளு குளுவென இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் ஞாபகம் வருவது ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு போன்ற இடங்கள் தான். ஆனால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஊட்டி போன்ற இடங்களுக்கு செல்வதால் கூட்ட நெரிசலும் அதிகமாக காணப்படும். இதனால் அழகிய இடங்களை சுற்றிப்பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே மக்கள் கூட்டம் அதிகளவு இல்லாத அழகிய இடங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பா கோவை மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 சுற்றுலா தலங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். இதன் அருகிலேயே பிரபலமான ஊட்டி போன்ற மலைவாசஸ்தலங்கள் உள்ளது.
வெள்ளையங்கிரி மலை - தென்னிந்தியாவின் "தென்கயிலாயம்" என்று போற்றப்படும் இந்த மலை, ஆன்மீகப் பயணிகளுக்கும் மலையேற்றப் பிரியர்களுக்கும் ஒரு சொர்க்கமாகும். கோவை பேருந்து நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வெள்ளையங்கிரி மலை. வெள்ளையங்கிரி பயணம் என்பது கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் உள்ள ஏழு மலைகளைக் கடந்து செல்வதாகும். ஒவ்வொரு மலையும் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும் சுயம்பு லிங்கம் வீற்றிருக்கும் சிகரம். இங்கு எப்போதும் பனிமூட்டமும், குளிர்ந்த காற்றும் வீசும். வரும் வழியிலேயே ஈஷா யோகா மையம் உள்ளது. வெள்ளையங்கிரி மலையில் பௌர்ணமிக்கு ஆண்கள் அதிகமாக வருவது வழக்கம்.
தென்னிந்தியாவின் 'சிரபுஞ்சி' என்று அழைக்கப்படும் இந்த மலைப்பகுதி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு சொர்க்கமாகும். தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் இதமான வானிலைக்காக இது புகழ்பெற்றது. கோவையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வால்பாறை செல்லும் வழியில் அதிர்ஷ்டம் இருந்தால் வரையாடுகள், யானைகள், சிங்கவால் குரங்குகள் மற்றும் சிறுத்தைகளைக் காண வாய்ப்புள்ளது. அழகான அழியானு அணை மற்றும் சுற்றுலா படகு சவாரி போன்றவை உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் மொத்தம் 40 ஊசிமுனை வளைவுகள் உள்ளன. ஒவ்வொரு வளைவிலும் நிலவும் இயற்கை அழகு உங்கள் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான மற்றும் பழமையான வைணவத் தலங்களில் ஒன்று காரமடை ரங்கநாதர் கோயில். 'கொங்கு நாட்டுத் திருவரங்கம்' என்று அழைக்கப்படும். கோயம்புத்தூரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கொங்கு மண்டலத்திற்கு முக்கிய ஆறாக இருப்பது பாவானி ஆறு, இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கிராமம். இயற்கையோடு அமைதியும் கலந்திருக்கும் கிராமத்தில் பிரசிதிபெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சாகசத்தை விரும்புவோருக்கு, மலையேற்ற தளங்கள் செல்பவர்களுக்கு பிடித்த இடமாக உள்ளது.
கோயம்புத்தூரிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாப்ஸ்லிப். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் அமைந்துள்ளது. டாப்ஸ்லிப் கண்காணிப்பு கோபுரம், சுற்றியுள்ள காடுகளின் அற்புதமான காட்சிகளைக் கொண்டுள்ளது. வங்காளப் புலிகள், யானைகள், காட்டெருமைகள் எளிதாக பார்க்கலாம். யானை சவாரி செய்யும் வசதியும் உண்டு. மேலும் இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் பரம்பிக்குளம் அணை உள்ளது. வரும் வழியில் ஆழியார் நீர்த்தேக்கமும் மூங்கில் தேக்கு மரங்களும் சுற்றுலா வாசிகளை வரவேற்கும்.
கோயம்புத்தூரில் இருந்து மேற்கே 40 கி.மீ தூரத்தில் உள்ளது சிறுவாணி. அடர்ந்த காடுகள் மற்றும் பாறை நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது. உலகிலேயே இரண்டாவது சுவையான நீர் சிறுவானி. கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த நீர் கேரள – தமிழக எல்லையில் பல்வேறு நீரோடைகள் வாயிலாக வந்து சிறுவாணி அணையில் வந்து சேர்கிறது. சிறுவாணி நதியில் நீர் பாய்ந்தோடும் அழகு ரம்மியமானது. மழைக்காலங்களில், அதிக அளவு தண்ணீர் கொட்டும், இது ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும்.