Published : Jan 08, 2025, 07:52 PM ISTUpdated : Jan 08, 2025, 07:58 PM IST
பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரனின் தம்பி ரமேஷ் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
25
Rowdy Nagendran
இதில், சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரவுடி நாகேந்திரனின் தம்பி ரவுடி ரமேஷ் மற்றும் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.
ரவுடி நாகேந்திரனின் தம்பி ரவுடி ரமேஷ் மற்றும் முருகன் ஆகியோர் முன்பகை விவகாரத்தில் மற்றொரு ரவுடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வியாசர்பாடி போலீசார் ரவுடி நாகேந்திரனின் தம்பி வீட்டில் ரமேஷ் மற்றும் முருகன் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
45
Weapons Seizure
சோதனையில் இருவர் வீடுகளில் இருந்தும் 51 பட்டா கத்திகள் மற்றும் இரண்டு இரும்பு ராடுகளை பறிமுதல் செய்யப்பட்டது. முன்விரோதம் காரணமாக கொடுங்கையூரைச் சேர்ந்த ரவுடியான மோகன் தாஸ் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கொலை செய்ய திட்டம் தீட்டிய ரவுடி நாகேந்திரனின் தம்பி ரமேஷ், முருகன், அக்கா மகன்களான தம்பி துரை, தமிழழகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவுடி மோகன் தாஸ் வடசென்னை பெண் தாதாவான இல்லா மல்லி என்பவரின் மகன் என்பதும் தன்னுடைய தம்பி கொலைக்கு பழிவாங்க நாகேந்திரனின் தம்பிகளை கொலை செய்ய அவரும் திட்டமிட்டது தெரியவந்தது.