ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விலகியுள்ளார். இந்த ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ அணி 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இந்த மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து, ரிஷப் பண்ட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சொன்னது என்ன?
பதவி விலகும் ரிஷப் பண்ட்டின் கோரிக்கையை லக்னோ அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தகவலை லக்னோ அணி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய லக்னோ அணியின் இயக்குனர் டாம் மூடி, "கேப்டன் பதவியில் இருந்து விலக ரிஷப் பண்ட் தானாக முன்வந்தார். அவரது முடிவை நாங்கள் முழு மனதுடன் மதிக்கிறோம். இதுபோன்ற முடிவுகளை எடுப்பது எளிதானது அல்ல. கேப்டனாக லக்னோ அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு அவர் கொண்டு வந்த ஆற்றலுக்கும், பங்களிப்பிற்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். இனி அணியை மீண்டும் கட்டமைப்பதில் எங்கள் கவனம் இருக்கும்" என்று கூறினார்.