இந்தத் தொடரின் தொடக்கம் பிரக்ஞானந்தாவிற்கு சற்று சவாலாகவே இருந்தது. மொத்தம் 10 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில், 6 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனால், அங்கிருந்துதான் பெரும் எழுச்சி பெற்ரார். இறுதி 4 சுற்றுகளிலும் தொடர்ச்சியாக எதிராளிகளை வீழ்த்தி, யாரும் எதிர்பாராத வகையில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் ஆனார்.
இந்தத் தொடரின் மிக முக்கிய சிறப்பம்சமாகப் பார்க்கப்படுவது, உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை (Magnus Carlsen) அவரது சொந்த மண்ணிலேயே கிளாசிக்கல் பிரிவில் இரண்டு முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியதாகும். இது ஒட்டுமொத்த செஸ் உலகையும் இந்தியாவின் பக்கம் திரும்பப் பார்க்க வைத்துள்ளது.
இறுதிச்சுற்றில் ஆதிக்கம்
நேற்று நடைபெற்ற 10-வது மற்றும் இறுதிச் சுற்றில், ஜெர்மனியின் இளம் நட்சத்திர வீரரான வின்சென்ட் கெய்மரை (Vincent Keymer) பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் வின்சென்ட் செய்த தவறுகளைச் சாதகமாக்கிக் கொண்டு, மிக நேர்த்தியாக விளையாடி முழுமையாக 3 புள்ளிகளைப் பெற்றார். மொத்தம் 18 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார்.