இந்திய வீராங்கனை பூஜா சிங் ஒரு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஹாங்காங்கில் இன்று (மே 29) நடந்த U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.93 மீட்டர் உயரம் தாண்டி, 14 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த தேசிய சாதனையை உடைத்தெறிந்தார். பூஜா சிங் தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார். இதற்கு முன்பு சஹானா குமாரி இந்த சாதனையை வைத்திருந்தார்.
இந்திய வீரர்கள் சாதனை
இதுமட்டுமல்லாமல், டெகாத்லான் போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ராகுல் ஜாக்கர் தங்கம் வெல்ல, உப்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா 1-2 என்ற நிலையில் பதக்கங்களைக் குவித்தது. ராகுல் ஜாக்கர் மொத்தம் 7,185 புள்ளிகள் பெற்று புதிய U20 தேசிய சாதனையையும் படைத்தார். 10 போட்டிகள் கொண்ட டெகாத்லானில் 7 போட்டிகளில் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பல சாதனைகளை முறியடித்த பூஜா சிங்
2026 ஆசிய யு-20 (U20) தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பூஜா தங்கம் வென்றதோடு மட்டுமல்லாமல், கடந்த 14 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த பல சாதனைகளையும் தகர்த்தெறிந்துள்ளார். அதாவது 1.91 மீட்டர் உயரத்தைத் தாண்டி தனது சொந்த யு-20 தேசிய சாதனையை முறியடித்தார். 1.93 மீட்டர் உயரத்தை தாண்டி புதிய சீனியர் தேசிய சாதனையைப் (Senior National Record) படைத்தார். 2012 ஆம் ஆண்டு முதல் சஹானா குமாரி வசம் இருந்த 1.92 மீட்டர் சாதனையை முறியடித்தார். மேலும் 2026 காமன்வெல்த் போட்டிகளுக்கும் தகுதி பெற்றார். இது தவிர இந்தியாவின் மிக உயர்ந்த உயரத்தைத் தாண்டிய பெண் உயரம் தாண்டுதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
இந்திய வீரர்கள் இலக்கு
மே 28 முதல் 31 வரை ஹாங்காங்கில் நடைபெறும் இந்த ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா சார்பில் 30 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் என மொத்தம் 48 தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தும்கூரில் நடைபெற்ற ஜூனியர் ஃபெடரேஷன் கோப்பை உள்ளிட்ட உள்நாட்டுப் போட்டிகளில் வீரர்களின் திறமையை அடிப்படையாகக் கொண்டு, இந்திய தடகள சம்மேளனம் இந்த அணியைத் தேர்வு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், ஆகஸ்ட் 5 முதல் 9 வரை ஹேவர்ட் ஃபீல்டில் நடைபெறவுள்ள உலக U20 தடகள சாம்பியன்ஷிப் 2026 போட்டிக்கு தகுதிபெறவும் இந்திய வீரர்கள் இலக்கு வைத்துள்ளனர்.