
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ராஜஸ்தான் தரப்பில் நந்த்ரே பர்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
சென்னை அணியில் ஜேமி ஓவர்டன் மட்டும் அதிகபட்சமாக 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். சென்னை அணிக்காக முதல் முறையாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் (6) ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய வைபவ் - ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது. வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்த வைபவ், போட்டியின் ஏழாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த துருவ் ஜுரல் (18) விரைவில் ஆட்டமிழந்தாலும், ஜெய்ஸ்வால் - ரியான் பராக் (14) ஜோடி ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சென்னை தரப்பில் அன்ஷுல் கம்போஜ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக, ஸ்கோர் காட்டுவது போலவே சென்னை அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது. தொடக்க வீரராக வந்த சஞ்சு, இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் பர்கர் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 14 ரன்கள் மட்டுமே. மூன்றாவது ஓவரின் கடைசிப் பந்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடும் (6) ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஆயுஷ் மாத்ரே (0) தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். பர்கர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரலிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். பவர் பிளே முடிவதற்கு சற்று முன்பு, மேத்யூ ஷார்ட்டும் (2) சந்தீப் ஷர்மாவின் ஸ்லோ பந்தில் மிட்-ஆனில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஜேமி ஓவர்டன் அதிரடி
சர்பராஸ் கான் (17), கார்த்திக் ஷர்மா (18) ஆகியோர் சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும், அது பெரிய அளவில் உதவவில்லை. சர்பராஸை ஜடேஜாவும், கார்த்திக்கை பிரிஜேஷ் ஷர்மாவும் ஆட்டமிழக்கச் செய்தனர். அடுத்து வந்த சிவம் துபேவையும் (6) ஜடேஜா வெளியேற்றினார். நூர் அஹ்மத் (1), மேட் ஹென்றி (5) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், சென்னை அணி 94 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், ஓவர்டனின் ஆட்டம்தான் சென்னையை ஒரு கௌரவமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றது. கடைசி ஓவரில் ஓவர்டன் ரன்-அவுட் ஆனார். அவரது இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடங்கும். அன்ஷுல் கம்போஜ் (7) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, தனது வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான IPL 2026 தொடரின் முதல் போட்டியில், CSK தனது இரண்டு ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா மற்றும் எம்.எஸ். தோனி ஆகிய இருவரில் ஒருவர் கூட இல்லாமல் களமிறங்கியது.
2022-ல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ரெய்னாவோ, அல்லது கணுக்கால் தசைப்பிடிப்பு காரணமாக இந்த சீசனின் முதல் இரண்டு வாரங்களில் விளையாடாத தோனியோ இந்த அணியில் இல்லை. ஐந்து முறை IPL சாம்பியனான CSK, இதுவரை மொத்தம் 277 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 253 போட்டிகள் IPL-லும், 24 போட்டிகள் இப்போது இல்லாத சாம்பியன்ஸ் லீக் T20 தொடரிலும் அடங்கும். இந்த 277 போட்டிகளிலும், தோனி அல்லது ரெய்னா, யாராவது ஒருவர் நிச்சயம் ப்ளேயிங் XI-ல் இருந்தார்கள். பெரும்பாலான போட்டிகளில் இரண்டு பேருமே ஒன்றாக விளையாடினர்.