
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதுவரையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றியது இல்லை.
இந்த நிலையில் தான் இந்த முறையும் ஒரு தொடரை கூட கைப்பற்றாத நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. சென்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்தது.
இதையடுத்து இந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்தது. நேற்று கேப்டவுனில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது.
பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் மோசமான சாதனை படைத்தது. 153 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது.
இதில், விராட் கோலி 46 ரன்கள் குவித்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், எய்டன் மார்க்ரம் மட்டும் நிலையாக நின்று106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தியாவிற்கு எதிராக மார்க்ரம் அடித்த முதல் சதம் இதுவாகும். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்ஸில் 176 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 79 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி காட்டினர். இதில், ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கில் 10 ரன்களில் ஆட்டமிழக்க, கோலி 12 ரன்களில் நடையை கட்டினார். கடைசியாக வந்த ஷ்ரேயாஸ் ஐயர் வின்னிங் ஷாட்டாக பவுண்டரி அடிக்க இந்திய அணி 12 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கேப்டவுனில் நடந்த 6 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 4ல் தோல்வி அடைந்துள்ளது.
மேலும், 2 போட்டியை டிரா செய்துள்ளது. அதுமட்டுமின்றி எம்.எஸ்.தோனிக்கு பிறகு டெஸ்ட் தொடரை டிரா செய்த இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
மேலும், முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கேப்டவுனில் வெற்றி பெற்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டை இந்திய அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
2ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே, கேப்டவுனில் 3ஆவது போட்டி நடந்தது. இந்தப் போட்டி டிராவில் முடியவே 3 போட்டிகள் கொனட் டெஸ்ட் தொடரானது 1-1 என்று சமன் செய்யப்பட்டது.
அதன் பிறகு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2 முறை தென் ஆப்பிரிக்கா சென்று தோல்வியோடு திரும்பியது. இந்த நிலையில் தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கேப்டவுனில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.