
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரையில் 25ஆவது லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இந்த தொடரில் பாப் டூ ப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.
எனினும், விராட் கோலி இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பெற்றுள்ளார். இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடி 319 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். மேலும், ஒரு சதம், 2 அரைசதம் அடித்துள்ளார். அதோடு, 29 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
இரண்டாவது இடத்தில் ரியான் பராக், 3ஆவது இடத்தில் சுப்மன் கில், 4ஆவது இடத்தில் சஞ்சு சாம்சன், 5ஆவது இடத்தில் சாய் சுதர்சன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஆர்சிபி அணிக்கு இன்னும் 8 போட்டிகள் இருக்கிறது.
இதில், குறைந்தது 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இதில், 4 போட்டிகளை ஹோம் மைதானத்திலும், 4 போட்டிகளை அவே மைதானத்திலும் விளையாடுகிறது.
ஹோம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே ஆர்சிபி 2 போட்டிகளை ஹோம் மைதானத்தில் விளையாடியிருக்கிறது. இதில், ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளை ஹோம் மைதானத்தில் எதிர்கொள்வது சவால் நிறைந்ததாக இருக்கும். இந்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்தால் கூட மற்ற 6 போட்டிகளிலும் ஜெயிக்க வேண்டும்.
மேலும், ஏப்ரல் 21 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் மைதானங்களில் எதிர்கொள்கிறது.
பலம் வாய்ந்த கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளை சொந்த மைதானத்தில் வீழ்த்துவது என்பது கடினமானது. டெல்லி, பஞ்சாப், குஜராத் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றால் கூட 3 போட்டிகளில் தான் வெற்றி பெறும். அப்படியிருக்கும் போது இந்த தொடரில் ஆர்சிபி பிளே ஆஃப் செல்வது சற்று கடினமானது தான்.
ஐபிஎல் விதிமுறையின்படி, ஒரு அணி பிளே ஆஃப் செல்ல வேண்டுமானால், 14 புள்ளிகள் பெற வேண்டும். இதுவே 18 புள்ளிகள் பெற்றிருந்தால் அந்த அணி டாப் 2 இடங்களை பிடிக்கும். பிளே ஆஃப் சுற்றில் ஆர்சிபி இடம் பெற வேண்டுமானால், எஞ்சிய 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதுவே 2 அணிகள் ஒரே மாதிரியாக 14 புள்ளிகள் பெற்றிருந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ, அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பு பெறும்.
தற்போது உள்ள இக்கட்டான சூழலில் ஆர்சிபி இனி வரும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 15 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் 30ஆவது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.