ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் ஆடியது.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல், அதேவேளையில் இருவரும் அடித்தும் ஆடினர்.
15 ஓவருக்கு மேல் ருத்ரதாண்டவம் ஆடினார் டி காக். 16வது ஓவரிலிருந்து சிக்ஸர் மழை பொழிந்தார் டி காக். 59 பந்தில் சதமடித்த டி காக், 19வது ஓவரில் 3 சிக்ஸர்களும், கடைசி ஓவரில் 4 பவுண்டரிகளும் விளாசினார். ராகுல் 51 பந்தில் 68 ரன்களும், டி காக் 70 பந்தில் 140 ரன்களும் குவிக்க, 20 ஓவரில் 210 ரன்களை குவித்த லக்னோ அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல்லில் முதல் விக்கெட்டுக்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன் வார்னரும் பேர்ஸ்டோவும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 185 ரன்களை குவித்திருந்தனர். இந்த பட்டியலில் கிறிஸ் லின் - கம்பீர் அடித்த ஜோடி (184*) 3ம் இடம் வகிக்கிறது. ஐபிஎல்லில் விக்கெட்டே விழாமல் இன்னிங்ஸ் முழுவதையும் முடித்த முதல் ஜோடி மற்றும் ஒரே ஜோடி (இதுவரை) என்ற சரித்திரத்தை படைத்துள்ளனர் டி காக் - ராகுல்.