
India vs New Zealand Champions Trophy 2025 Final : இந்தியாவிற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 251 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் ஓரளவு நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை. இந்திய அணியின் ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி முக்கியமான தருணத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தனர்.
முதல் விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து 57 ரன்கள் எடுத்தது. முதல் 10 ஓவர்களில் 69 ரன்கள் குவித்தது. இதில், வில் யங் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு ரச்சின் ரவீந்திரா (37) மற்றும் கேன் வில்லியம்சன் (11) இருவரையும் குல்தீப் யாதவ் ஆட்டமிழக்க செய்தார். டாம் லேதம் (14) விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். மிடில் ஆர்டரில் வந்த கிளென் பிலிப்ஸ் 34 ரன்களுக்கு வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.
டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வேல் இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். மிட்செல் 63 ரன்னுக்கு ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் 53 ரன்கள் எடுத்து கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக நியூசிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்தது.
அதிக ரன்கள் கொடுத்த வேகப்பந்து வீச்சாளர்:
முகமது ஷமி 9 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து 74 ரன்கள் கொடுத்தார். இந்தப் போட்டியில் Most Expensive Player ஆக ஷமி திகழ்கிறார்.
ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை.
சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர்கள்:
குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் 2 விக்கெட் – 40 ரன்கள்
வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்கள் 2 விக்கெட் – 45 ரன்கள்
ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் 1 விக்கெட் – 30 ரன்கள்
அக்சர் படேல் 8 ஓவர்கள் 29 ரன்கள் – விக்கெட் எடுக்கவில்லை.
251 ரன்களை இந்திய அணி சேஸ் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். குரூப் சுற்று போட்டியில் நியூலாந்திற்கு எதிராக இந்தியா 249 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆடிய நியூ., 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலமாக இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட இந்திய அணி!
நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டு வருகிறது.
ரச்சின் ரவீந்திர கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது ஷமி தவறவிட்டார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
வருண் சக்கரவர்த்தி ஓவரில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார்.
அக்ஷர் படேல் ஓவரில் டேரில் மிட்செல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரோகித் சர்மா தவறவிட்டார்.
ரவீந்திர ஜடேஜா ஓவரில் கிளென் பிலிப்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சுப்மன் கில் தவறவிட்டார்.
இப்படி இந்திய அணி வீரர்கள் கேட்ச் தவறவிட்டது, எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.