
பாகிஸ்தானில் தற்போது 10ஆவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கியுள்ளது. இன்று 19ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் விளையாடி வருகின்றன. நாளை 20ஆம் தேதி தொடங்கும் 2ஆவது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் ஏற்கனவே இந்திய அணிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாதது சற்று வருத்தமான ஒன்றாக இருந்தாலும் இப்போது இந்தியின் அணியின் தலைமை பயிற்சியாளும் நாடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெலின் தந்தை இறந்த நிலையில் அவர் அவசர அவசரமாக நாடு திரும்பியிருக்கிறார். தற்போது இந்திய அணி வீரர்கள் துபாயில் தீவிர பயிற்சியில் இருக்கும் நிலையில் மோர்கல் துபாயிலிருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பியுள்ளார். இது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் கூறியிருப்பதாவது: தனது தந்தை ஆல்பர்ட் மரணமடைந்த செய்தியை திங்கள்கிழமை மோர்கெல் அறிந்தார்.
அதன்பிறகு அவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தனது வீட்டிற்குப் புறப்பட்டார். சனிக்கிழமை இந்திய அணியுடன் துபாய்க்கு வந்தார் பந்துவீச்சு பயிற்சியாளர். ஞாயிற்றுக்கிழமை அணியின் முதல் பயிற்சியின் போதும் அவர் இருந்தார். ஆனால் திங்கள்கிழமை தனது தந்தையின் மரணச் செய்தியை அறிந்த பிறகு, அணியுடன் இருக்க முடியவில்லை. தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு மீண்டும் இந்திய அணியில் இணையலாம். ஆனால் வியாழக்கிழமை வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு முன்பு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் துபாய்க்குத் திரும்புவாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
குடும்பத்தில் தனது தந்தையுடன்தான் மோர்கெலுக்கு மிகவும் நெருக்கம். அவர் எல்லா விஷயங்களிலும் தனது தந்தையின் ஆலோசனையைப் பெறுவார். இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்பும் தனது தந்தையுடன் பேசியிருந்தார். இதுகுறித்து பிசிசிஐக்கு அளித்த பேட்டியில் மோர்கெல் கூறியதாவது, ‘இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகப் பொறுப்பேற்கும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நான் வீட்டில் அமர்ந்து 5 நிமிடங்கள் யோசித்தேன். பிறகு முதலில் அப்பாவுக்கு போன் செய்தேன்.
அவர் என்னுடன் பேசினார். நான் என் மனைவியிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசவில்லை. பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில், திருமணமான ஆண்கள் தங்கள் மனைவியுடன்தான் பேசுவார்கள். ஆனால் நான் அப்பாவிடம் கலந்துரையாடினேன். என் அப்பா நீண்ட காலமாக கிரிக்கெட் ரசிகர். என்ன நடக்கப் போகிறது என்பது அவருக்குத் தெரியும். எனவே அப்பாவுடன் கலந்துரையாடுவது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் நானே நேரத்தைச் செலவிட்டேன். அந்தக் கணத்தை ரசித்தேன். பிறகு குடும்பத்தினரிடம், எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாகத் தெரிவித்தேன். இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.’
காயம் காரணமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட முடியவில்லை. இதனால் இந்திய வேகப்பந்து வீச்சுப் படையின் பலம் குறைந்துள்ளது. இதற்கிடையில், பந்துவீச்சு பயிற்சியாளர் சொந்த ஊருக்குத் திரும்பியதால் இந்திய பந்துவீச்சுப் பிரிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா:
பும்ரா இல்லையென்றாலும் கூட இந்திய அணியில் முகமது ஷமி, ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதில் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரு சிறப்பாக பந்து வீசினர். இதே போன்று தான் சுழல் ஜாம்பவான் வருண் சக்கரவர்த்தியும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டு கடைசியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட்டம் வெல்வதே இந்திய அணியின் இலக்கு.