
இந்தியாவில் சுமார் 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. ஆம்.. நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியும், ஒரு முறை கோப்பையை கையில் ஏந்திய குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் மே 31ம் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 2வது முறையாக கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமபலம் வாய்ந்த அணிகள்
குவாலிஃபையர்-1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆர்சிபி அணி நேரடியாக கெத்தாக ஃபைனலுக்குள் நுழைந்தது. ஆர்சிபியிடம் தோற்று இருந்தாலும் குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பந்தாடிய குஜராத் டைட்டன்ஸ் மாஸாக பைனலுக்குள் சென்றுள்ளது. அதே வேளையில் லீக் சுற்றில் இந்த இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருந்தன. ஆர்சிபியும், குஜராத்தும் தலா 18 புள்ளிகள் பெற்று முதலிரண்டு இடத்தில் அமர்ந்திருந்தன.
லீக் போட்டிகளில் இரு அணிகளும் இரண்டு முறை மோதி தலா ஒரு வெற்றியை பதிவு செய்தன. ஆனால் குவாலிஃபையர்-1 போட்டியில் குஜராத்தை ஆர்சிபி பந்தாடியது. இந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் கோப்பையை வென்று கெத்து காட்ட குஜராத் டைட்டன்ஸ் முய்ற்சி செய்யும். குஜராத் அணியின் முதுகெலும்பே மொத்தம் 5 பேர் தான். அதாவது கேப்டன் சுப்மன் கில், தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 700 ரன்களுக்கு மேலாக அடித்து மிரட்டுகின்றனர். மிடில் வரிசையில் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடுகிறார். பவுலிங்கில் அதிக விக்கெட் எடுத்தவரான கசிசோ ரபாடா, முகமது சிராஜ் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துகின்றனர். ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுத்து துருப்புச்சீட்டாக உள்ளார்.
இவர்கள் 6 பேரை நம்பி தான் குஜராத் அணியே உள்ளது. இவர்களில் ஒன்றிரண்டு பேர் நாளை சொதப்பி விட்டாலும் கோப்பையை நினைத்து பார்க்க வேண்டும். அதே வேளையில் ஆர்சிபி அணி ஒரு குறிப்பிட்ட வீரர்களை மட்டும் சார்ந்து இல்லை. அந்த அணியில் ரோமாரியோ ஷெப்பர்ட் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் எதாவது ஒரு போட்டியில் மேட்ச் வின்னராக திகழ்கின்றனர். விராட் கோலி, பில் சால்ட், புவனேஷ்வர் குமார், ஜோஸ் ஹேசில்வுட், குர்னால் பாண்ட்யா, வெங்கடேஷ் ஐயர், கேப்டன் ரஜத் படிதார் ஆகியோர் ஆட்டநாயகன் விருது வென்றதே இதற்கு சாட்சி.
ஆர்சிபி அணியை பொறுத்தவரை குவாலிஃபையர்-1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக களமிறங்கிய அதே அணியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கிரிக்கெட் நிபுணர்கள் ஆர்சிபி பேட்டிங் வரிசையை பலப்படுத்த ஒரே ஒரு மாற்றம் இருக்கும் என கூறுகின்றனர். அதாவது காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத சிக்சர் மன்னன் பில் சால்ட் களமிறங்குவார் என தகவல்கள் கூறுகின்றன.
ஓப்பனிங்கில் மாற்றமா?
அதாவது பாஸ்ட் பவுலர் ஜேக்கப் டபிக்கு பதிலாக பில் சால்ட் களமிறங்க வாய்ப்புள்ளது. சால்ட் வழக்கம்போல் ஓப்பனிங்கில் களமிறங்கினால் வெங்கடேஷ் ஐயர் நடு வரிசை அல்லது பினிஷ்ங்கில் களம் இறங்குவார். ஆர்சிபி முதலில் பவுலிங் செய்தால் சுயாஷ் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். பில் சால்ட் இம்பேக் பிளேயராக இருப்பார். ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தால் பில் சால்ட் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். சுயாஷ் சர்மா இம்பேக் வீரராக இருப்பார் என கூறப்படுகிறது. ஆனால் வெற்றி பிளேயிங் லெவனை ஆர்சிபி மாற்றுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
குஜாரத் டைட்டன்ஸ்க்கு எதிரான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ: ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், குர்னால் பாண்ட்யா, டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா, வெங்கடேஷ் ஐயர், ராசிக் சலாம், ஜோஸ் ஹேசில்வுட், புவனேஷ்வர்குமார். இம்பேக்ட் வீரர்: சுயாஷ் சர்மா