டி20 உலக கோப்பைக்காக தயாராகிவரும் இந்திய அணி, ஆசிய கோப்பையில் தோல்வியடைந்திருந்தாலும், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது.
நேற்று ஹைதராபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 186 ரன்களை குவிக்க, சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலியின் அரைசதங்களால் கடைசி ஓவரில் இலக்கை அடித்து இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.
ஆஸி.,க்கு எதிரான 3வது டி20 போட்டியில் பெற்ற வெற்றி, 2022ம் ஆண்டில் இந்திய அணியின் 21வது வெற்றி ஆகும். இந்த ஆண்டில் ஆடிய 28 போட்டிகளில் 21 வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக டி20 வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இந்திய அணி இந்த ஆண்டில் இன்னும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் ஆடவிருப்பதால், 21 என்ற வெற்றி எண்ணிக்கை இன்னும் உயரும். இந்த சாதனையை இன்னொரு அணி இனிமேல் முறியடிப்பது கடினமாகும்.