IND W vs AUS W: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வாழ்வா? சாவா? போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ஹர்மன்பிரீத் கவுர் மெகா சாதனை படைத்தார்.
மகளிர் டி20 உலகக்கோப்பை; இந்தியா, ஆஸ்திரேலியா போட்டி
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய முக்கியமான போட்டியில் இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலியா மகளிர் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. ஓப்பனிங்கில் களமிறங்கிய ஸ்டார் வீரர் ஸ்மிருதி மந்தனாவும், மூத்த வீரர் ஷெபாலி வர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 9 ஒவரில் 66 ரன்கள் சேர்த்தனர்.
ஷெபாலி வர்மா அதிரடி
அதிரடியாக விளையாடிய ஷெபாலி வர்மா 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் நிதானமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 37 பந்தில் 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், ஜெமிமா ரோட்ரிக்சும் அணியை மீட்டனர். ஜெமிமா டெஸ்ட் மேட்ச் போல பொறுமையாக விளையாட ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் பட்டைய கிளப்பினார். சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கினார்.
22
ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஹர்மன்பிரீத் கவுர்
தடுமாற்றத்துடன் நிதானமாக விளையாடிய ஜெமிமா 28 பந்தில் 34 ரன்கள் அடித்து ரிட்டையர் ஹர்ட் ஆனார். மறுபக்கம் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் வெளுத்துக்கட்டினார். குறிப்பாக கடைசி ஓவரில் அவர் மோலினக்ஸ் ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி அவுட் ஆனார். ஹர்மன்பிரீத் வெறும் 27 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 56 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சோஃபி மோலினக்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியாவுக்கு இது வாழ்வா? சாவா? போட்டி
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. மகளிர் டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா வங்கதேசத்தை வீழ்த்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் உலகக் கோப்பை பயணத்தில் இந்தப் போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.