
Sameer Rizvi : பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றால் பஞ்சாப் கிங்ஸ் முதலிடத்திற்கு முன்னேறும் என்ற நிலையில் இன்றைய போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியை சனிக்கிழமையன்று பிசிசிஐ அறிவித்தது. டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கவில்லை. டெஸ்ட் அணி அறிவிப்புக்குப் பிறகு மாலையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸூக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் அபாரமாக விளையாடி தேர்வாளர்களுக்கு பதிலடி கொடுத்தார். அவர் 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷ்ரேயாஸின் அபார இன்னிங்ஸால் பஞ்சாப் அணி பெரிய ஸ்கோரை எட்டியது.
ஷ்ரேயாஸின் அபார இன்னிங்ஸால் டெல்லி கேபிடல்ஸூக்கு எதிராக 8 விக்கெட்டுகளுக்கு 206 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். ஷ்ரேயாஸின் அரைசதத்துடன், மார்கஸ் ஸ்டோய்னிஸ் அபாரமாக விளையாடினார். 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்தார் ஸ்டோய்னிஸ். ஜோஸ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்தார் இங்கிலிஸ். தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். நெஹல் வதேரா 16 ரன்களும், சஷாங்க் சிங் 11 ரன்களும் எடுத்தனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் சிறப்பாகப் பந்து வீசினார். 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விப்ராஜ் நிகாம் 4 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷ் குமார் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தார். 4 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.
கடின இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் மற்றும் கே எல் ராகுல் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதில் ராகுல் அதிரடியாக விளையாடி 35 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். அதன் பிறகு வந்த கருண் நாயன் தன் பங்கிற்கு அதிரடி காட்ட கேப்டன் ஃபாப் 23 ரன்களில் நடையை கட்டினார்.
அவரைத் தொடர்ந்து வந்த செடிகுல்லா அடல் 22 ரன்னில் வெளியேற கருண் நாயர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக சமீர் ரிஸ்வி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர். இதில், சமீர் ரிஸ்வி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுவும் 22 பந்துகளில் அரைசதம் அடித்துக் கொடுத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெரியளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த சீசனுக்கு முன்னதாக கழற்றிவிடப்பட்ட நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அவரை ரூ.95 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் சமீர் ரிஸ்விக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கவில்லை. நேற்று நடந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
ரிஸ்வி 25 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ஸ்டப்ஸ் 18 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியோடு புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் நிறைவு செய்து ஐபிஎல் 2025 தொடரிலிருந்து வெளியேறியது.
ஐபிஎல் 2025 தொடக்கத்தில் விளையாடிய எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று டெல்லி கேபிடல்ஸ் முதலிடத்திலேயே நீடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் பஞ்சாப் கிங்ஸ் 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும்.
ஆனால், தோல்வி அடைந்த நிலையில் 17 புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் நீடிக்கிறது. வரும் 26ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது.