அதிமுகவில் சசிகலா தனது அரசியல் ராஜதந்திரம் மூலம் டெல்டா மாவட்டங்களில், எடப்பாடி பழனிசாமிக்கு புதிய நெருக்கடியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது நகர்வுகள், அதிமுகவின் எதிர்கால அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சிப் பூசல் கடந்த சில ஆண்டுகளாகவே தணியாத நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி ஒருபுறம் இயங்கினாலும், 'சின்னம்மா' சசிகலாவின் திடீர் அரசியல் சுற்றுப்பயணங்களும், ரகசியத் திட்டங்களும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தனது கோட்டையான டெல்டா மாவட்டங்களில் அவர் மேற்கொண்டு வரும் நகர்வுகள், எடப்பாடிக்கு ஒரு புதிய 'செக்' வைத்திருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
24
டெல்டா பாசம்: சசிகலாவின் பலப்பரீட்சை
சமீபகாலமாக சசிகலா மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்கள் வெறும் கண்துடைப்பு அல்ல என்பதை அவரது ஆதரவாளர்கள் நிரூபித்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் சமுதாயத் தலைவர்களைச் சந்தித்து வரும் சசிகலா, "கட்சியை மீட்டெடுப்பதே எனது ஒரே குறிக்கோள்" என்பதைத் திட்டவட்டமாகப் பேசி வருகிறார். எடப்பாடி அணியில் அதிருப்தியில் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்களை சசிகலா ரகசியமாகச் சந்தித்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.டெல்டாவில் செல்வாக்கு மிக்க குறிப்பிட்ட சமூக வாக்குகளை மீண்டும் ஒருமுறை ஒருங்கிணைப்பதன் மூலம், எடப்பாடியின் பிடியை அந்தப் பகுதியில் தளர்த்த சசிகலா முயல்கிறார்.
34
எடப்பாடிக்கு புதிய நெருக்கடி
தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வலுவாக இருந்தாலும், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் சசிகலாவின் எழுச்சி அவருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வரப்போகும் தேர்தல்களைச் சந்திக்க ஒருங்கிணைந்த அதிமுக அவசியம் என்ற குரல் தொண்டர்களிடையே ஒலிக்கத் தொடங்கியுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு 'புதிய அதிமுக' உருவாக வாய்ப்புள்ளதாக கூறும் அவரது ஆதரவாளர்கள் டெல்டாவை தன்வசப்படுத்தி, திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை வெற்றிவாகை சூட முடிவெடுத்துள்ளாராம்.
மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து களம் இறங்கினால், அது எடப்பாடியின் வாக்கு வங்கியை முழுமையாக சிதறடிக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கணக்கு. சசிகலாவின் இந்த 'டெல்டா பாசம்' வெறும் உணர்ச்சிகரமானது மட்டுமல்ல, அது எடப்பாடியின் அதிகார மையத்தை ஆட்டுவிக்கும் ஒரு அரசியல் கணக்கு என்கின்றனர் அரசியல் ஆலோசகர்கள். சசிகலாவின் இந்த அதிரடி ஆட்டம் அதிமுகவின் எதிர்காலத்தை மாற்றியமைக்குமா? அல்லது எடப்பாடி தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்வாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.