அவனுக்கு எப்படி இவ்ளோ தைரியம் வந்தது? காயத்ரி ரகுராம் போட்டோவை மார்பிங் செய்தவரை வெளுத்துவாங்கிய கஸ்தூரி

First Published Jan 30, 2023, 11:27 AM IST

காயத்ரி ரகுராமின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகியை நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி கடுமையாக சாடி உள்ளார்.

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகிய பின்னர், அக்கட்சியினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு காயத்ரி ரகுராமும் அசராமல் பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில், பாஜகவின் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்சி பிரிவின் துணைத்தலைவராக இருக்கும் டி.பாபு என்பவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்த மார்பிங் புகைப்படத்தை பகிர்ந்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியும் பதிவிட்டு இருந்தார்.

பாஜக நிர்வாகியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது சைபர் கிரைம் போலீஸில் நடிகை காயத்ரி ரகுராம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், காயத்ரி ரகுராமின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகியை நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி கடுமையாக சாடி உள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளதாவது : “காயத்ரி ரகுராம் அவர்களின் ஆபாசமான மார்பிங் செய்யப்பட்ட போலிப் படத்தைப் பயன்படுத்தி போடப்பட்ட டுவிட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அது ஏற்கனவே வைரலாகியுள்ளது. அனைவரும் அதை பார்த்திருப்பீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அந்த நபர் பாஜகவின் அலுவலக அதிகாரியா? உங்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கு ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா? எதன் அடிப்படையில் பதவிகளை வழங்குகிறீர்கள்? மக்கள் செய்யத் தயங்கும் ஒரு விஷயத்தை, இந்த அயோக்கியன் ஒரு பொது தளத்தில் செய்திருக்கிறான், அவனுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் கிடைக்கிறது?

தங்களை எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆனால் அதைச் செய்வதற்கும் ஒருசில் வழிகள் இருக்கிறது. இவரோ தமிழக பாஜகவைக் காக்கவில்லை, அதற்கு மேலும் அவலத்தை சேர்த்துள்ளார். இந்தப் பதவியை ஓரங்கட்ட தமிழக பாஜகவில் யாராவது இருக்கிறார்களா? இந்த மலிவான செயல் ஒரு குற்றமாகும்.

இதையும் படியுங்கள்... புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகி..! சைபர் கிரைமில் புகார் அளித்து அதிரடி காட்டிய காயத்ரி

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஒடுக்கப்படுவதன் வலியை அறிந்து, பொது வெளியில் அனுதாபம் காட்டுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கு மாறாக, அவர் பாலியல் துஷ்பிரயோகத்தை தேர்வு செய்கிறார். அவரது பிரிவினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் அவர் எப்படி முன்மாதிரியாக இருப்பார்?

பெண்கள் மோசமான தாக்குதல்களுக்குப் பழகிவிட்டோம் ஆனால் இது ? பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. அந்த ட்வீட்டை நீக்கிவிட்டு அவர் ஓடிவிட்டார். எந்தவித மன்னிப்பும் கேட்கவில்லை. ஆனால் சேதம் ஏற்பட்டுள்ளது. ஓப்பனாக சொல்கிறேன், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில், தமிழக பாஜகவுக்கு ஏற்கனவே நல்ல பெயர் இல்லை. சரியோ தவறோ, இதற்கு முன் நடந்த குற்றங்களை அண்னாமலை தலைமையிலான தமிழக பாஜக மென்மையாக கையாண்டதால் இதுபோன்ற கருத்து பரவலாக உள்ளது. 

தப்பு செய்தவர்களை தண்டிக்கப்படாமல் விடமாட்டோம் என்பதை நிரூபிக்க உங்களுக்கு இதன்மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பாஜக மனசாட்சி மற்றும் தார்மீக கொள்கை உள்ள கட்சி என்றால், உடனடியாக நடவடிக்கை எடுங்கள். இதுபோன்ற விபரீதங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இதை உதாரணமாக செய்து காட்டுங்கள். 

நான் இதை ஒரு தரப்புக்காக எழுதவில்லை. நான் காயத்ரியின் ரசிகையும் அல்ல. இது கட்சி அரசியல் அல்ல, இது ஒரு சக பெண், சக நடிகை, மற்றும் பொது வெளியில் இருக்கும் அனைத்து பெண்களைப் பற்றியது. மனிதனாக நடந்து கொள்வதைப் பற்றியது” என தன் ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

இதையும் படியுங்கள்... போலீசை விமர்சித்து கோஷம்..! விடுதலை சிறுத்தை கட்சி மீது நடவடிக்கை.? ஸ்டாலினுக்கு அட்வைஸ் சொல்லும் அண்ணாமலை

click me!