
திருமணத்தில் பெண்களை விட ஆண்களுக்கு அதிக வயது இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. இந்தியாவில் வயது வந்தோர் என்று கருதப்படுவதற்கான வயது ஒன்று தான். ஆனால் ஏன் திருமணத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கு வயதி வித்தியாசம் இருக்கிறது? திருமணத்தில் இருக்கும் இந்த வயது வித்தியாசம் எப்போது விவாதப் பொருளாகவே உள்ளது.
குறிப்பாக குழந்தை திருமண முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, சட்டப்பூர்வ திருமண வயது அறிவிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவில் குறிப்பிட்ட காலம் பேசு பொருளாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் 1884-ம் ஆண்டு டாக்டர் ருக்மாபாய் வழக்குக்கு பின்னரும், 1889-ம் ஆண்டு புல்மோனி தாசியின் மரணத்தின் போது இந்தியாவில் திருமண வயது தொடர்பான விவாதம் தொடங்கியது.
இதில் ருக்மாபாய் குழந்தை திருமணம் செய்து கொள்வதை மறுத்தார். 11 வயதான புல்மோனி தாசி 35 வயது கணவரால் வன்புணர்வு செய்யப்பட்ட போது இறந்தார். கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்ற புல்மோனி தாசியின் கணவர், பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
குழந்தை திருமணங்கள் சிறுமி இறப்பதை தடுக்கும் வகையில் 1891-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு திருமண வயது வரம்பு சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி உடலுறவு வைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச வயது 12 என நிர்ணயிக்கப்பட்டது. அப்போது இந்த சட்டத்திற்கு சில சமூக சீர்திருத்தவாதிகள் ஆதரவு தெரிவித்தனர்.
1894-ம் ஆண்டு மைசூர் மாகாணத்தில் 8 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்து கொள்வதை தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1914-ம் ஆண்டு ஆண்களின் திருமண வயது 14 என்று, பெண்களின் திருமண வயது 12 என்றும் முடிவு செய்யப்பட்டது.
எனினும் குழந்தை திருமணங்கள் ஒழிந்தபாடில்லை. 1927-ம் ஆண்டு ஆண்கள் குறைந்தபட்ச 18 வயது ஆன பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பெண்களின் திருமண வயது 14 என்றும் முன்மொழியப்பட்டது. 1929-ம் ஆண்டு சட்டமாக மாறிய இந்த சட்டம் சர்தா சட்டம் என்று அழைக்கப்படுகிறது.
1978ம் ஆண்டு இந்த சர்தா சட்டம் திருத்தப்பட்டது.
அதன்பின்னர் ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும், பெண்களின் திருமண வயது 18 என்றும் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இந்த வயதுக்கு கீழ் திருமணம் என்பது தொடர்கதையாகவே இருந்தது.
2006-ம் ஆண்டு புதிதாக கொண்டுவரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டம், குழந்தை திருமணம் செய்தால் அது குற்றம் என்ற நிலையை உருவாக்கியது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நிதியம், உலகளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் நடைபெறுவதாக கூறுகிறது. இந்தியாவில் மேற்குவங்கம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரி, ஆண், பெண் திருமண வயதில் ஏன் வித்தியாசம்?
மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னரே ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண வயதில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்ற நிலை தோன்றியது. பெண்களை விட ஆண்களுக்கு அதிக வயது இருக்க வேண்டும் என்றும் குறிக்கப்பட்டது. குழந்தை திருமண தடுப்பு சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், இந்து திருமண சட்டம், முஸ்லீம் திருமண சட்டம் என எல்லா சட்டத்திலுமே திருமணம் செய்து கொள்ள குறைந்தபட்ச வயது ஆணுக்கு 21 என்றும், பெண்ணுக்கு 18 என்றும் குறிப்பிடுகிறது.
திருமண வயதில் மதம் முக்கிய காரணமாக இருந்தாலும், ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாக வேண்டும் என்பது வேறு சில காரணங்களுக்கும் இருக்கின்றன. தன்னை விட அதிக வயதுள்ள பெண்ணை திருமணம் செய்யும் போது அங்கு கணவருக்கு அடங்கிப் போக பெண் மறுக்கலாம்.
சமத்துவம் பற்றி ஆணாதிக்க சமூகம் உற்சாகமாக பேசினாலும், பெண்களின் சமத்துவம் என்று வரும் போது அது கேள்விக்குறியாகிவிடும். தங்களை விட வயதில் குறைவாக இருக்கும் பெண்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆண்கள் விரும்புவார்கள். அப்போது தங்கள் கட்டுப்பாட்டில் அவர்களை வைக்க முடியும்.
பெண்களை அவர்களின் தன்மையை இழந்தவர்களாக பயந்தவர்களாக திணறிய ஆளுமைகளாக தங்களின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்றவாறு ஆண்களை மாற்றிக்கொள்ள முடியும். இதனால் தங்கள் ஆசைகளை அடக்கி பிறரின் ஆசைகளை நிறைவேற்றினால் தான் நல்ல பெண் என்ற எண்ணத்திற்கு பெண்கள் வருகின்றனர். மொத்தத்தில் பெண்களை கட்டுப்பாட்டில் வைக்கவே ஆண்களை விட பெண்களின் திருமண வயது குறைவாக உள்ளது.
ஆனால் கணவன் – மனைவிக்கு இருக்கும் வயது வித்தியாசத்தில் சட்ட அடிப்படைகள் எதுவும் இல்லை. திருமணத்தில் இணைகின்ற தம்பதி எல்லா நிலையில் சமமானவர்கள் தான். இந்த மனநிலை சிலருக்கு தற்போது வந்திருந்தாலும் பெரும்பாலானோருக்கு இன்னும் வரவில்லை. திருமண வயதில் இருக்கும் வேறுபாடு சமத்துவமின்மை. இது சட்டப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
இந்தியாவில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது 2023 இல் திருத்தப்பட முன்மொழியப்பட்டது. பெண்களின் திருமண வ்யது 18 முதல் 21 அதிகரிக்க இது பரிந்துரைக்கிறது. ஆனால், இந்தத் திருத்தங்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.