மீன் சாப்பிடும்போது நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், பாதரசம். கடலில் நீண்ட காலம் வாழும் சுறா, வாள் மீன் போன்ற பெரிய வேட்டையாடும் மீன்கள், தாங்கள் உண்ணும் சிறிய மீன்கள் மூலம் அதிகளவு பாதரசத்தை தங்கள் உடலில் சேர்த்துக்கொள்கின்றன. இந்த பாதரசம், அதிகளவில் நம் உடலுக்குள் சென்றால் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடும்.
இதன் காரணமாகவே, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகள், இதுபோன்ற பெரிய கடல் மீன்களைத் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆற்று மீன்களில் இந்த அபாயம் குறைவு. அதேபோல், மீனை சமைக்கும் முறையும் முக்கியம்; அதிக உப்பு, எண்ணெயில் பொரித்து சாப்பிடுவது அதன் சத்துக்களைக் குறைத்து, உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.