Mosquito : மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசுத் தொல்லையை விரட்ட ரசாயனப் பொருட்கள் தேவையில்லை. இயற்கையான முறையில் கொசுக்களைத் தடுத்து வீட்டைப் பாதுகாக்க உதவும் சில அருமையான உட்புறச் செடிகளைப் பற்றிப் பார்ப்போம்.
மழைக்காலம் என்றாலே இதமான குளிர் காற்றோடு சேர்ந்து கொசுக்களும் நம் வீட்டுக்குள் படையெடுக்கத் தொடங்கிவிடும். டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற ஆபத்தான நோய்கள் பரவ இந்தக் கொசுக்களே முக்கியக் காரணமாக அமைகின்றன.
வீட்டில் உள்ள கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தும் ஆல்அவுட் (All Out) மற்றும் கொசுவத்தி சுருள் போன்ற ரசாயனப் பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதோடு, சிலருக்கு கடுமையான அலர்ஜியையும் ஏற்படுத்தும். இதற்கு மிகச் சிறந்த மற்றும் இயற்கையான ஒரு தீர்வு உள்ளது. நம் வீட்டின் உள்ளேயே சில குறிப்பிட்ட உட்புறச் செடிகளை (Indoor Plants) வளர்த்தாலே போதும், ரசாயனப் பயன்பாடு இல்லாமல் கொசுக்களை நம் வீட்டுப் பக்கமே வரவிடாமல் தடுத்துவிடலாம். அப்படிப்பட்ட அற்புதமான செடிகள் என்னென்ன என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
இந்திய வீடுகளில் துளசி செடி இல்லாத வீடே இல்லை. இது ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, ஒரு சிறந்த பூச்சிவிரட்டியும்கூட. இதன் வாசனை கொசு, ஈக்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஜன்னல் அருகே வைத்தால் கொசுக்கள் உள்ளே வராது. இந்தச் செடிக்கு நல்ல சூரிய வெளிச்சம் கிடைத்தால் போதும், சூப்பராக வளரும்.
மார்க்கெட்டில் விற்கும் கொசு விரட்டிகளில் 'சிட்ரோனெல்லா' எண்ணெய் பயன்படுத்துவார்கள். அதை இந்த லெமன் கிராஸ் செடியிலிருந்துதான் தயாரிக்கிறார்கள். இதன் எலுமிச்சை வாசனை கொசுக்களைக் குழப்பி, வீட்டுக்குள் வராமல் தடுக்கும். இதை பால்கனியிலோ அல்லது வெளிச்சம் வரும் ஜன்னல் அருகிலோ எளிதாக வளர்க்கலாம்.
புதினா என்றாலே அதன் ஜில் வாசனைதான் நினைவுக்கு வரும். புதினா இலைகளில் உள்ள 'மென்தால்' என்ற பொருள் கொசு, எறும்பு போன்ற பூச்சிகளுக்குப் பிடிக்காது. கிச்சன் ஜன்னல் ஓரம் ஒரு சின்ன தொட்டியில் இதை வைத்தால், வேகமாகப் படர்ந்து வளரும். இதன் இலைகளைக் கசக்கி ரூம் கார்னரில் வைத்தால், ஏர் ஃப்ரெஷ்னராகவும் வேலை செய்யும்.
லாவெண்டர் பூ பார்க்க அழகாக இருப்பதுடன், அதன் வாசனை மனதை அமைதிப்படுத்தும். ஆனால் இந்த வாசனைதான் கொசுக்களின் பெரிய எதிரி. இதில் உள்ள 'லினலூல்' என்ற பொருள் கொசுக்களையும் ஈக்களையும் விரட்டியடிக்கும். நல்ல காற்றும் வெளிச்சமும் வரும் இடத்தில் இதை வைத்தால், வீடு மணப்பதோடு கொசுத் தொல்லையும் இருக்காது.
சாமந்திப் பூக்கள் அலங்காரத்திற்கு மட்டுமல்ல, கொசுக்களை விரட்டவும் உதவும். இதன் இலை மற்றும் பூக்களின் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது. அதேபோல, ரோஸ்மேரி செடியின் வாசனை பூச்சிகளை அண்டவிடாது. பால்கனியில் இந்த இரண்டையும் வளர்த்தால், அழகும் கிடைக்கும், பாதுகாப்பும் கிடைக்கும்.
செடிகளை வளர்ப்பதோடு, சரியாகப் பராமரிக்கவும் வேண்டும். தொட்டிக்குக் கீழே உள்ள தட்டுகளில் தண்ணீர் தேங்க விடாதீர்கள். தேங்கிய நீரில்தான் கொசுக்கள் முட்டையிடும். ஜன்னல், கதவுகளுக்கு அருகில் செடிகளை வையுங்கள். துளசி, புதினா இலைகளை லேசாகக் கசக்கினால் வாசனை அதிகமாகப் பரவி கொசுக்களை விரட்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.