கோடைக்காலத்தில் வெறும் வயிற்றுடன் வெளியே செல்வது உடல் சோர்வு, நீரிழப்பு போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தும். வெப்பத்தை தாங்க உடலுக்கு கூடுதல் சக்தி தேவைப்படுவதால், காலை உணவை தவிர்ப்பது தலைச்சுற்றல், பலவீனம் ஏற்படும்.
கோடைக்காலம் வந்துவிட்டாலே வெப்பமும் வியர்வையும் அதிகரித்து உடல் விரைவாக சோர்வடையும். இந்த நேரத்தில் பலர் காலை உணவை தவிர்த்து வேலை, கல்லூரி அல்லது வெளிப்பணிகளுக்காக அவசரமாக கிளம்பி விடுகிறார்கள். ஆனால் கோடையில் வெறும் வயிற்றுடன் வெளியே செல்வது உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக அதிக வெப்பநிலையால் உடலுக்கு கூடுதல் சக்தியும் நீர்ச்சத்தும் தேவைப்படும் நிலையில், உணவை தவிர்ப்பது உடல் நலத்தை பாதிக்கக்கூடும்.
26
உடல் சோர்வு மற்றும் பலவீனம் அதிகரிக்கும்
கோடைக்காலத்தில் உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்த உடல் அதிகமாக வேலை செய்கிறது. இதற்காக அதிக ஆற்றல் தேவைப்படும். காலை உணவை தவிர்த்தால் உடலுக்கு தேவையான எரிசக்தி கிடைக்காது. இதனால் சோர்வு, தலைச்சுற்றல், பலவீனம் மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வெளியில் வேலை செய்பவர்கள் அல்லது அதிக உடற்பயிற்சி செய்வோருக்கு இது இன்னும் கடினமாக இருக்கலாம்.
36
நீரிழப்பு ஏற்படும் அபாயம்
உணவு என்பது வெறும் பசியை தீர்க்க மட்டுமல்ல; உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் வழங்குகிறது. குறிப்பாக வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம்பழம், தயிர் போன்ற உணவுகளில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இவற்றை சாப்பிடாமல் வெளியே சென்றால் உடலில் நீர் குறைவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வெப்பத்தால் அதிக வியர்வை வெளியேறும் போது உடல் விரைவில் டிஹைட்ரேஷனுக்கு ஆளாகி தலைவலி, மயக்கம், வறண்ட தோல் போன்ற பிரச்சினைகள் தோன்றலாம்.
கோடையில் உடல் ஏற்கனவே வெப்ப அழுத்தத்தில் இருக்கும். அப்போது வெறும் வயிற்றில் வெளியே சென்றால் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் திறன் குறையும். இதனால் அதிக வியர்வை, உடல் சூடு, சீக்கிரம் களைப்பு மற்றும் வெயிலால் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.
56
கோடைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
எண்ணெய் மற்றும் பொரியல் உணவுகளை குறைத்து, இலகுவான வீட்டுச் சாப்பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காய், கீரை வகைகள், தர்பூசணி, முலாம்பழம், பேரிச்சை மற்றும் பல்வேறு பழங்களை உணவில் சேர்க்கவும்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதோடு மோர், இளநீர் போன்றவற்றையும் அருந்தலாம்.
குளிரவைத்த மூலிகை டீக்கள், சாமந்தி டீ அல்லது பெருஞ்சீரக டீ போன்றவை உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
காலை பசி இல்லாவிட்டாலும் பழங்கள், தயிர், ஊறவைத்த பாதாம் அல்லது ஸ்மூத்தி போன்ற லேசான உணவுகளை சாப்பிட்டு வெளியே செல்லுங்கள். இது ரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்தி உடலை வெப்பத்திற்குத் தயார்படுத்தும்.
66
தண்ணீர் அவசியம் மக்களே
கோடைக்காலத்தில் உடலுக்கு தேவையான சக்தி மற்றும் நீர்ச்சத்தை சரியாக வழங்குவது மிகவும் அவசியம். வெறும் வயிற்றுடன் வெளியே செல்வது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே காலை நேரத்தில் குறைந்தபட்சம் லேசான ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு நாளை தொடங்குவது உடலை பாதுகாக்கும் சிறந்த பழக்கமாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.