காளான் சுவையானது மட்டுமல்ல, உடலுக்குத் தேவையான பல சத்துக்களையும் கொண்டது. ஆனால், கடையில் இருந்து வாங்கிய காளானை எப்படி சுத்தம் செய்வது, எப்படி சேமிப்பது என்று தெரியாமல் பலர் சிரமப்படுகிறார்கள். காளானை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல, சரியாக சேமிக்கவில்லை என்றால், வாங்கிய ஓரிரு நாட்களிலேயே கறுத்து வீணாகிவிடும். காளான் வாங்குவது முதல் சேமிப்பது வரை என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
காளான் வாங்கும்போது, அது வெள்ளையாகவும், உறுதியாகவும் இருக்கிறதா என்று பாருங்கள். காளான் மீது ஈரப்பதம் அதிகமாகி பிசுபிசுப்பாக இருந்தாலோ, கறுப்புப் புள்ளிகள் இருந்தாலோ, அல்லது கெட்ட வாசனை வந்தாலோ அவற்றை வாங்க வேண்டாம். காளானின் தலைக்குக் கீழே உள்ள அடுக்குகள் மூடியபடி இருந்தால், அவை மிகவும் ஃபிரெஷ் என்று அர்த்தம்.
பலர் காய்கறிகளைக் கழுவுவது போல, காளான்களையும் தண்ணீரில் போட்டு அதிக நேரம் ஊற வைப்பார்கள். ஆனால் இது தவறு. காளான்கள் ஒரு ஸ்பான்ஜ் போன்ற தன்மையுடையவை. தண்ணீரில் அதிக நேரம் இருந்தால், அவை நீரை உறிஞ்சி மென்மையாகிவிடும், சமைக்கும்போது சுவையையும் இழந்துவிடும். எனவே, சமைப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மட்டும், அதன் மேலுள்ள மண் போகும்படி லேசாகக் கழுவி, உடனடியாக உலர்ந்த துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் துடைக்க வேண்டும்.
காளான்களின் மேலுள்ள கறுப்பு மண் அடுக்கை எளிதாக அகற்ற ஒரு அருமையான வழி இருக்கிறது. காளான்களின் மீது சிறிது மைதா மாவு அல்லது கோதுமை மாவைத் தூவுங்கள். கையால் மெதுவாகத் தேய்த்தால், காளான்களில் உள்ள அழுக்கு மற்றும் மண் மாவுடன் எளிதாக வந்துவிடும். அதன் பிறகு, ஒருமுறை சுத்தமான நீரில் கழுவி உலர்த்தினால், காளான்கள் வெள்ளையாகவும் சுத்தமாகவும் காணப்படும்.
கடையில் இருந்து வாங்கிய காளான்களை பலர் அப்படியே பிளாஸ்டிக் கவருடன் ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். இதனால் பிளாஸ்டிக் உள்ளே ஈரப்பதம் அதிகமாகி, காளான்கள் விரைவில் கெட்டுப்போகும். காளான்களை பேப்பர் கவரில் (Paper Bag) வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால், பேப்பர் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும், காளான்கள் அதிக நாட்கள் ஃபிரெஷ்ஷாக இருக்கும். ஒருவேளை பாக்ஸில் வைப்பதாக இருந்தால், கீழே டிஷ்யூ பேப்பர் வைத்து அதன் மீது காளான்களை வைத்து மூடி வைக்கவும்.
காளான்களை சமைக்கும்போது முதலிலேயே உப்பு போட்டால், அவற்றில் உள்ள நீர் எல்லாம் வெளியேறி, குழம்பு நீர்த்துப் போகும். எனவே, காளான்கள் சிறிது வெந்த பிறகு, கடைசியில் உப்பு சேர்ப்பது நல்லது. அப்போதுதான் அவற்றின் உண்மையான சுவையும், ஆரோக்கிய நன்மைகளும் முழுமையாகக் கிடைக்கும். இந்த சின்ன சின்ன விஷயங்களைக் கவனித்தால், காளான் அதிக நாட்கள் ஃபிரெஷ்ஷாக இருப்பதுடன், உங்கள் சமையலின் சுவையும் கூடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.