Water Bottle Cleaning: நாம் தினமும் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் சுத்தமாக இருப்பது மிக மிக அவசியம். இந்த செய்தியில் வாட்டர் பாட்டிலை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், அலுவலகத்திற்குச் செல்பவர்கள் எனப் பலரும் பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்துகின்றனர். நல்ல தரமான பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தினால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், அவற்றைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் அழுக்கு, பாக்டீரியா, கெட்ட நாற்றம் மற்றும் மஞ்சள் கறை படிந்து ஆரோக்கியத்திற்குத் கேடு விளைவிக்கும்.
ஆகவே, வீட்டிலேயே பாட்டிலை எவ்வாறு எளிதாகச் சுத்தம் செய்வது என்பதற்கு இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள். இது உங்கள் பாட்டிலைச் சுத்தம் செய்வது மட்டுமன்றி, புதியது போலப் பளபளப்பாகவும் மாற்றிவிடும். அத்துடன், எந்தக் கெட்ட நாற்றமும் அழுக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
முதலில், ஒரு பிரஷ் வைத்து பாட்டிலின் உட்புறத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு, மென்மையான டிடர்ஜென்ட் அல்லது சோப்பைப் பயன்படுத்தி நுரை வரச்செய்து, பிறகு பிரஷ்ஷால் உள்ளே நன்றாகத் தேய்க்க வேண்டும். பாட்டிலைப் புதியது போல ஜொலிக்க வைக்க, உப்பும் எலுமிச்சையும் பயன்படுத்தலாம். பாட்டிலில் 1-2 ஸ்பூன் உப்பு போட்டு, அரை எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, வெதுவெதுப்பான நீர் ஊற்றி நன்றாகக் குலுக்க வேண்டும். இது பாட்டிலைச் சுத்தம் செய்வது மட்டுமன்றி, பாக்டீரியா மற்றும் கெட்ட நாற்றத்தையும் நீக்கிவிடும்.
பாட்டிலைச் சுத்தம் செய்ய, 4 ஸ்பூன் வினிகர், 1 ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாகக் கலக்குங்கள். பிறகு அதில் வெதுவெதுப்பான நீர ஊற்றி, 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். இது பாட்டிலை முழுமையாகச் சுத்தம் செய்து, பாக்டீரியா மற்றும் கெட்ட நாற்றத்தை நீக்கிவிடும். பாட்டிலின் மூடி, ஸ்ட்ரா ஆகியவற்றையும் தனியாகச் சுத்தம் செய்ய வேண்டும். அவற்றினுள்ளும் பாக்டீரியா சேர வாய்ப்புள்ளது. இதற்கு பிரஷ், மென்மையான டிடர்ஜென்ட் கரைசல் மற்றும் நீர் பயன்படுத்திச் சுத்தம் செய்யுங்கள்.
சூடான நீரைத் தவிர்க்கவும்: பிளாஸ்டிக் பாட்டில்களைச் சுத்தம் செய்ய கொதிக்கும் மிகச் சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது. இது பிளாஸ்டிக்கை உருக்குவதுடன், அதில் உள்ள 'பிஸ்பெனால் ஏ' போன்ற தீங்கான வேதிப்பொருட்களை நீரில் கலக்கச் செய்துவிடும்.
முழுமையாக உலர வைக்கவும்: பாட்டிலைக் கழுவிய பிறகு மூடியைப் மூடாமல், தலைகீழாகக் கவிழ்த்து வைத்து காற்றோட்டமாக முழுமையாக உலர விட வேண்டும். ஈரம் தங்கி இருந்தால் மீண்டும் பாக்டீரியா மற்றும் கெட்ட நாற்றம் உருவாக வாய்ப்புள்ளது.
காலாவதி காலம்: பிளாஸ்டிக் பாட்டில்களில் கீறல்கள் ஏற்பட்டாலோ அல்லது நிறம் மாறினாலோ அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும். மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் (6 மாதம் முதல் 1 வருடம்) பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மாற்றி புதியதைப் பயன்படுத்துவதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.