
பொதுவாக குழந்தைகள் என்றாலே சென்சிடிவ் ஆனவர்கள் தான். அவர்களுக்கு எல்லாவிதமான உணவுகளும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக அவர்களை நீண்ட தூரம் பயணத்திற்கு அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கு கொடுக்கும் உணவு விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருப்பது பெற்றோரின் கடமை. ஆனால் குழந்தைகள் விரும்பும் உணவுகளை மட்டுமே பெற்றோர்கள் எடுத்துச் செல்வார்கள். அது தவறு. அப்படியானால் அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கலாம்? எதை கொடுக்கக்கூடாது? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளின் செரிமான மண்டலம் முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்காது. இதனால் அவர்களுக்கு எல்லா விதமான உணவுகளும் எளிதில் ஜீரணமாகாது. அப்படி ஜீரணமாகாத உணவை அவர்களுக்கு கொடுத்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகள் ரொம்பவே சிரமப்படுவார்கள். எனவே பெற்றோர்கள் பயணத்தின் போது குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை தான் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் அவர்களது ஆரோக்கியமும் பாதிக்கப்படாமல் நன்றாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பயணத்திற்கு முன்பும் குழந்தைகளின் செரிமானத்தை பாதிக்கும் உணவுகளை ஒருபோதும் கொடுக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்கவே வேண்டாம்.
நீண்ட பயணத்தின் போது குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை கொடுக்க வேண்டாம். அது அவர்களின் செரிமானத்தை மந்தமாக்கும் இதனால் வாயு, அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுபோல சிப்ஸ், கேக், பிஸ்கட், சாக்லேட், போன்ற பதப்படுத்தப்பட்ட் உணவுகளையும் எடுத்துச் செல்வதை தவிர்க்கவும். ஏனெனில் அவை ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் குழந்தைகள் நீரிழிப்பு, வயிற்று வலி, வாந்தி குமட்டல் தலை சுற்றலால் பாதிக்கப்படுவார்கள்.
பல சமயங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பசிக்கும்போதெல்லாம் கொடுப்பதற்காகப் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் அல்லது ஜூஸ்களை எடுத்துச் செல்வார்கள். இந்த உணவுகளில் சர்க்கரை மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக உள்ளது, இவை சிறிய குழந்தைகளுக்கு வீக்கம் அல்லது வாயுவை ஏற்படுத்தும். எனவே, பயணத்தின்போது குழந்தைகளுக்குத் தண்ணீர் மட்டுமே கொடுங்கள்.
- நீண்ட பயணத்தின் போது முளைகட்டிய தானியங்கள், சாலட்கள் எடுத்துச் செல்வதை பெற்றோர்கள் தவிர்க்கவும். அவற்றைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் அது அவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தும், விஷமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு ஒருபோதும் கொடுக்கக் கூடாது.
- பயணத்திற்கு முன் குழந்தைகளுக்கு சிக்கன், மட்டன், மீன் போன்ற காரமான உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டாம். அது அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
- தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களை நீண்ட நேரம் வெளியில் வைத்திருந்தால் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் பாக்டீரியாக்களும் வளரும். அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கிற்கு வழிவகுக்கும். எனவே இந்த மாதிரியான உணவுகளையும் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டாம்.
என்ன கொடுக்க வேண்டும்?
பயணத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உணவு லேசானதாகவும், புதிதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்காக, பெற்றோர்கள் பயணத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட கிச்சடி போன்ற உணவுகள், ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களைத் தேர்வு செய்யலாம்.