India suspends Pakistani visas: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து வருவதால் பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என இந்தியா கருதுகிறது. அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
24
Terrorist attack in Pahalgam
பாகிஸ்தானுடன் செய்து கொண்ட சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. மேலும் அட்டாரி வாகா எல்லையை மூடுவதாக அறிவித்தது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசாவை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ விசாக்கள் உள்பட அனைத்து விசாக்களையும் ரத்து செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ''பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவால் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து செல்லுபடியாகும் விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகின்றன.
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும். தற்போது திருத்தப்பட்டபடி, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் விசா காலாவதியாகும் முன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க இந்தியர்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவுடன் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதையும் நிறுத்தியுள்ள பாகிஸ்தான், இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொண்டுள்ள சிம்லா ஒப்பந்தத்தையும் நிறுத்தவதாக தெரிவித்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியா போருக்கு வழிவகுப்பதாக கூறியுள்ளது.
44
Indian aircraft banned from flying in Pakistan airspace
தங்கள் வான் எல்லையில் இந்தியா விமானங்கள் பறக்கக் கூடாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளதால் இந்தியா விமானங்கள் இனிமேல் பாகிஸ்தான் வான் எல்லை வழியாக வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்திய விமானங்கள் இனிமேல் மாற்று வழியில் செல்லும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வான் எல்லையில் செல்லாமல் மாற்றுப் பாதையில் செல்வதால் கூடுதல் எரிபொருள் செலவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.