
இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் பேரிச்சம்பழம் மிக முக்கியமானது மற்றும் சிறப்பானது. சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த இந்த பழம், உலகம் முழுவதும் உள்ள மக்களால் ஒரு சிறந்த ஆற்றல் தரும் உணவாக பார்க்கப்படுகிறது. ஆனால் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி பேரிச்சம்பழத்திற்கும் பொருந்தும் என்கின்றனர் மருத்துவர்கள். பேரீச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடந்தாலும், அதை நாம் எப்படி, எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் முழுப்பயனும் நமக்குக் கிடைக்குமாம். பேரிச்சம்பழத்தின் நன்மைகள் மற்றும் அதனை சரியான முறையில் உட்கொள்ளும் முறைகள் குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
பேரிச்சம்பழம் ஒரு சிறிய பழமாக இருந்தாலும், அதில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதில் செரிமானத்தை சீராக்க உதவும் நார்ச்சத்தும் , உடலின் முக்கிய செயல்பாடுகளுக்குத் தேவையான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேரிச்சம்பழத்தின் வகை மற்றும் அதன் அளவு ஆகிய இரண்டையும் சரியாகப் புரிந்து கொண்டு சாப்பிட்டால், இதைவிட ஒரு சிறந்த, ஆரோக்கியமான தின்பண்டம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறப்படுகிறது என கூறுகிறது அந்த ஆய்வு.
பேரிச்சம்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரையின் அளவு சற்றே அதிகமாக இருப்பதால், அதனைத் தனியாகச் சாப்பிடுவதை விட சில குறிப்பிட்ட வழிகளில் சாப்பிடுவது உடலுக்கு அதிக நன்மையைத் தரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பேரிச்சம்பழத்தை வெறும் வாயில் தனியாகச் சாப்பிடுவதை விட, பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம். பேரிச்சம்பழத்தில் உள்ள இயற்கைச் சர்க்கரையை நமது உடல் உடனடியாக உறிஞ்சுவதைத் தடுத்து, அந்தச் சர்க்கரை உறிஞ்சும் வேகத்தை இந்த உலர் பருப்புகள் மெதுவாக்குகின்றன. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பது தடுக்கப்பட்டு, உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
நீங்கள் உடற்பயிற்சி செய்பவராகவோ அல்லது ஜிம்மிற்குச் செல்பவராகவோ இருந்தால், உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன் பேரிச்சம்பழத்தைச் சாப்பிடுவது நல்ல பலனை தரும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் பேரிச்சம்பழத்தை உட்கொள்ளும் போது, அதிலுள்ள இயற்கைச் சர்க்கரை உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலாக மாற்றப்பட்டு உடற்பயிற்சியின் போது செலவழிக்கப்படும். இதனால் அந்த சர்க்கரை கொழுப்பாக உடலிலேயே தங்கி, தேவையில்லாத உடல் உபாதைகளையோ அல்லது உடல் எடை அதிகரிப்பையோ ஏற்படுத்தாமல் தடுக்கிறது.
பேரிச்சம்பழத்தை ஓட்ஸ் அல்லது பிற அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளுடன் சேர்த்து காலை உணவாகவோ அல்லது மாலை நேர தின்பண்டமாகவோ எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நார்ச்சத்துள்ள உணவுகளுடன் பேரிச்சம்பழம் இணையும் போது அது செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது உடலின் வளர்சிதை மாற்றத்திற்குப் பெரிதும் துணையாக நின்று, நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
நம்மில் பலர் பேரிச்சம்பழம் உடலுக்கு நல்லது என்ற காரணத்தினால், ஒரே நேரத்தில் 10 முதல் 15 பழங்களைச் தொடர்ந்து சாப்பிட்டு விடுகிறோம். இது முற்றிலும் தவறான பழக்கமாகும், ஏனெனில் இது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்க வழிவகுக்கும். மருத்துவர்களின் அறிவுரைப்படி, ஒரு வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு பேரிச்சம்பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஒரே அடியாகச் சாப்பிடாமல், ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் தகுந்த இடைவெளி விட்டு இதனைச் சாப்பிடும் போதுதான், பேரிச்சம்பழத்தின் முழுமையான மருத்துவப் பலன்களும் நம் உடலை வந்தடையும்.
பேரிச்சம்பழம் என்பது நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும், அதனைச் சரியான முறையில், சரியான கலவையில், தகுந்த அளவோடு சாப்பிடுவது மட்டுமே நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான வாழ்விற்குப் பேரிச்சம்பழத்தை உங்கள் அன்றாட உணவில் சரியான முறையில் சேர்த்துப் பயன்பெறுங்கள். உங்களது நண்பர்கள் அல்லது குடும்பத்தினரில் பேரிச்சம்பழத்தை அமிதமாய் விரும்பிச் சாப்பிடும் "டேட்ஸ் பிரியர்கள்" யாராவது இருந்தால், அவர்களின் ஆரோக்கிய நலன் கருதி இந்தத் தகவலை உடனே பகிர்ந்துகொள்ளுங்கள்!