சுதா கொங்கரா இயக்கிய இறுதிச் சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரித்திகா. நிஜத்தில் பாக்ஸிங் வீராங்கனையான இவர், படத்திலும் அதே ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்காக நடிகை ரித்திகா சிங்கிற்கு தேசிய விருதும் கிடைத்தது.
இறுதிச் சுற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார் ரித்திகா. தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்த ரித்திகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ஓ மை கடவுளே திரைப்படம்.
இதையடுத்து விஜய் ஆண்டனியுடன் கொலை படத்தில் நடித்த ரித்திகா சிங், கடந்த ஆண்டு வெளிவந்த துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். அப்படம் பிளாப் ஆனாலும் ரித்திகா சிங் ஆடிய நடனம் வேறலெவலில் ஹிட்டாகி இருந்தது.
தற்போது நடிகை ரித்திகா சிங் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் ரித்திகா.