
தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டர்களை ரகுவரனுக்கு முன்.. ரகுவரனுக்கு பின் என பிரிக்கலாம். ‘ஒருநாள் இந்த சீட்ல உட்கார்ந்து பாரு தம்பி அப்போ தெரியும்’ என முதல்வன் அரங்கநாதனாக ரகுவரன் பேசும் அந்த டயலாக் இல்லை என்றால் முதல்வன் படம் இல்லை. அதேபோல் மார்க் ஆண்டனி இல்லை என்றால் பாட்ஷா இல்லை என சொல்லும் அளவுக்கு, ரகுவரன் வில்லனாக நடித்ததால் பல படங்கள் வெற்றியை குவித்துள்ளன.
கோடம்பாக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எனும் நடிப்பு சூறாவளி 90களில் உச்சம் தொட்ட போது அவருக்கு ஈடுகொடுத்து நடித்து தனது நடிப்பால், ஆண்டனி கதாபாத்திரத்தையும் மக்கள் மனதில் நிறுத்தியவர் ரகுவரன். அவர் கேமரா முன் வந்துவிட்டாலே நடிப்பு ராட்சசனாக மாறிவிடுவார். திரையுலகமே கொண்டாடிய கலைஞர்கள் பட்டியலில் ரகுவரனுக்கென தனி இடமும் உண்டு.
கேரளாவின் பாலக்காடு, தமிழ் சினிமாவுக்கு தந்த அற்புத கலைஞன் தான் இந்த ரகுவரன். ரகுவரன் சிறுவனாக இருக்கும் போதே ஓட்டல் தொழில் நடத்துவதற்காக அவர் குடும்பத்தினர் கோவைக்கு இடம்பெயர்ந்தனர். பள்ளிப்படிப்பு முழுவதும் கோவையில் தான் முடித்துள்ளார் ரகுவரன். இளங்கலை வரலாறு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஸ்வப்ன தினங்கள் என்கிற கன்னட படத்தில் நடித்தார் ரகுவரன்.
சிறு சிறு வேடங்களில் நடித்த அவர், பின்னர் அடையார் திரைப்பட கல்லூரியில் நடிப்புக்கான பட்டப்படிப்பை முடித்தார். பின் சில காலம் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1982-ம் ஆண்டு தன்னுடைய 23 வயதில் ஏழாவது மனிதன் என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ரகுவரன். இப்படம் பிளாப் ஆனாலும் இதற்கு விருதுகள் கிடைத்தன. சினிமா பற்றி திரைப்படக் கல்லூரி அள்ளிக் கொடுத்த அறிவும், அங்கே கிடைத்த அனுபவமும், ரகுவரனை மாறுபட்ட வசன உச்சரிப்பும், தேர்ந்த உடல்மொழியும் கொண்ட ரசனையான கலைஞனாக உருவாக்கியது.
இதையும் படியுங்கள்... பரிதாபங்கள் கோபி சுதாகரையும் பவன் கல்யாண் மிரட்டினாரா? லட்டு பாவங்கள் வீடியோ நீக்கப்பட்டது ஏன்?
ஹீரோவாக அறிமுகமான அடுத்த ஆண்டே சில்க் சில்க் சில்க் என்கிற படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இதனால் அவரை வில்லனாகவும் ஏற்றுக்கொண்டது தமிழ் சினிமா. 1986-ம் ஆண்டு தான் ரகுவரனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஆண்டு விசு உடன் அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத் ஆகிய படங்கள் வெளியாகின இந்த இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.
இதில் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் நடித்த முதல் படம் மிஸ்டர் பாரத் தான். இவர்களின் ஹீரோ - வில்லன் காம்போ ஒர்க் அவுட் ஆனதால் அடுத்தடுத்து சிவா, ஊர்க்காவலன், ராஜா சின்ன ரோஜா, முத்து போன்ற படங்களில் இந்த பிளாக்பஸ்டர் காம்போ தொடர்ந்தது. அதுமட்டுமின்றி பாட்ஷா படத்தில் ரஜினி என்கிற மாஸ் ஹீரோவை துணிச்சலாக எதிர்த்த ஸ்டைலிஷ் வில்லனாக மார்க் ஆண்டனி கதாபாத்திரத்தில் மிரட்டினார் ரகுவரன். இந்த கேரக்டருக்காக அவர் பேசிய வாய்ஸ் மாடுலேசன் இன்றளவும் டிவி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படி ரஜினியை வில்லன் கதாபாத்திரங்களால் விரட்டி விரட்டி அடித்த ரகுவரன், கமல்ஹாசன் உடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இவர்கள் இருவரும் பணியாற்றும் சூழல் அவ்வப்போது இருந்தும் அது கைநழுவி போய் இருக்கிறது. குறிப்பாக மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான நாயகனில் போலீஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்க மணிரத்னம் முதலில் அணுகியது ரகுவரனை தான். அதற்கு அவர் ஓகே சொன்னாலும் சில காரணங்களால் நடிக்க மறுத்திருக்கிறார். பின்னர் அந்த வேடத்தில் நாசரை நடிக்க வைத்தனர்.
ரகுவரன் அந்த கேரக்டருக்காக தலை முடிவை வெட்ட மறுத்ததால் அவர் அப்படத்தில் இருந்து விலகியதாக அவரது மனைவி ரோகிணி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் கமலும் ரகுவரனும் இணைந்து நடிக்காததற்கு வேறு சில காரணங்களும் கூறப்பட்டது.
கமல் தன்னைவிட திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார் எனவும் அதனால் தான் அவர் ரகுவரன் உடன் சேர்ந்து நடிக்கவே இல்லை என்றும் பரவலாக பேசப்பட்டு இருக்கிறது.
ஆனால் அதெல்லாம் இல்லை என்பதை தன்னுடைய படங்கள் வாயிலாகவே சொல்லி இருக்கிறார் கமல். அவர் தன்னைவிட நடிப்பில் சிறந்தவரான சிவாஜி கணேசன் உடன் தேவர்மகன் படத்தில் நடித்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய சமகால போட்டியாளரான ரஜினிகாந்த் உடனும் எந்தவித ஈகோவும் இன்று பல படங்களில் நடித்து உலகநாயகன் தன்னைவிட திறமை கொண்ட நடிகர்களுடன் நடிக்க மாட்டார் என்கிற விமர்சனத்தை தவிடுபொடி ஆக்கி இருக்கிறார் கமல்.
இதையும் படியுங்கள்... வெறும் ரூ.79 லட்சம் பட்ஜெட்டில் எடுத்து... 225 மடங்கு லாபம் பார்த்த விஜய் சேதுபதி படம் பற்றி தெரியுமா?