
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் கமலுடன் இணைந்து நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 50வது படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 51வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்புவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜூலை 2025 இல் படப்பிடிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இதன் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தளத்திலிருந்து சிம்புவின் புதிய கெட்டப்புடன் கூடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த படம் வட சென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டர் கதையாக உருவாகியுள்ளது. வெற்றிமாறன் ஏற்கனவே தனுஷை வைத்து இயக்கிய ‘வடசென்னை’ படத்தைப் போலவே இந்த படமும் வடசென்னை பின்னணியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே இந்த படம் ‘வடசென்னை 2’ ஆக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. சிம்புவின் தோற்றமும், படத்தின் கதைக்களமும் ‘வடசென்னை’ முதல் பாகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று யூகங்கள் எழுந்தன. இருப்பினும் இது ‘வடசென்னை 2’ அல்ல, வேறு ஒரு கதை என்று கூறப்படுகிறது. நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸுக்காக வெற்றிமாறன் உருவாக்கிய ‘ராஜன் வகையறா’ கதையை தான் சிம்புவுக்காக சில மாற்றங்கள் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ‘குபேரா’ பட புரமோஷன் விழாவில் பேசிய தனுஷ் வடசென்னையின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் என் துவங்கும் என்று கூறியதால் இது ‘வடசென்னை 2’ கதை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
தற்போது இந்த படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் நிலையம் அரங்கில் இந்த படப்பிடிப்புகள் நடந்துள்ளது. குறுகிய கால தயாரிப்பாக உருவாகி, இந்த ஆண்டிலேயே படம் வெளியாகும் திட்டமிடலுடன் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளது. வடசென்னை படத்தில் இடம்பெற்று இருந்த சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் போன்ற துணை கதாபாத்திரங்கள் சிம்புவின் படத்திலும் தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் நெல்சன் திலிப் குமார் மற்றும் நடிகர் கவின் ஆகியோர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் நெல்சன் சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருப்பதால் நெல்சன் நடிகராக அறிமுகமாவது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
சந்தோஷ் நாராயணன் அல்லது ஜி வி பிரகாஷ் இருவரில் ஒருவர் படத்திற்கு இசையமைப்பார்கள் என்று கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் வெற்றிமாறன் சிம்பு படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் இன்னும் ஓராண்டுக்கு துவங்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதனால் வெற்றிமாறன் ‘வடசென்னை 2’ படத்தின் கதைக்கு முந்தைய கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார். இந்த கதையை சிம்புவிடம் சொல்ல சிம்புவும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
‘வடசென்னை’ முதல் பாகத்தின் கதையை முதலில் நடிகர் சிம்புக்காகவே வெற்றிமாறன் எழுதியிருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக நடிகர் தனுஷ் அந்த படத்தில் நடித்தார். தனுஷின் அன்பு கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. எனவே ‘வடசென்னை’ இரண்டாம் பாகத்திலும் தனுஷ் நடிக்க வேண்டும் என்கிற ஆவலுடன் இருந்த நிலையில், தற்போது வெற்றிமாறன் சிம்புவை வடசென்னை யூனிவர்ஸ்க்குள் கொண்டுவந்துள்ளார்.