
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இங்கு அறிமுகமாகி, அதன் பிறகு பாலிவுட் உலகில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உருவெடுத்தவர்கள் பலர் உண்டு. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர் தான் மறைந்த லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி. அவர் தன்னுடைய பயணத்தை தொடங்கியது தமிழ் சினிமாவில் தான் என்றாலும் கூட, ஒரு கட்டத்தில் பாலிவுட் உலகில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தார். தமிழிலிருந்து சென்ற பலர் இப்போது பாலிவுட் உலகில் மிகப்பெரிய நாயகிகளாக வளம் வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காமெடி நடிகையாக நடித்து வந்த ஒருவர், பாலிவுட் உலகில் கதையின் நாயகியாகவும் ஒரே ஒரு படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
அந்த மெகா ஹிட் நடிகை வேறு யாருமல்ல மறைந்த ஆச்சி மனோரமா தான். 1958 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தன்னுடைய 21 வது வயதில் நடிகையாக கலை உலகில் இவர் அறிமுகமானார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு பயணத்தையும் தாண்டி 2013ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் வரை இவர் பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். பாடல்கள் பாடுவதிலும் வல்லவரான நடிகை மனோரமா நான்கு தலைமுறை நடிகர்களோடு நடித்து அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியை பொறுத்தவரை 2 திரைப்படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல்வேறு முன்னணி நடிகர்களோடு இணைந்து காமெடியில் கலக்கியவர் மனோரமா.
இந்த சூழலில் கடந்த 1974 ஆம் ஆண்டு ஹிந்தி மொழியில் வெளியான திரைப்படம் தான் "குன்வாரா பாப்" என்கின்ற திரைப்படம். பாலிவுட் உலகில் புகழ்பெற்ற காமெடி நடிகர் மெஹ்மூத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அவரே கதையின் நாயகனாகவும் வேடமேற்று நடித்திருந்தார். இந்த திரைப்படம் 1921ம் ஆண்டு வெளியான "தி கிட்" என்கின்ற ஆங்கில திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் மெஹ்மூத் அவர்களுக்கு ஜோடியாக நடித்து பாலிவுட் உலகில் நாயகியாக அறிமுகமானார் மனோரமா. அவர் நடித்த ஒரே ஒரு ஹிந்தி திரைப்படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகை மனோரமா, தமிழ் மொழியில் தான் 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதை தவிர மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தினார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு அவருடைய உடல்நிலை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 2 ஆண்டுகள் அவர் மருத்துவமனையில் தான் தன்னுடைய இறுதி நேரத்தை செலவிட்டார். இந்த சூழலில் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இரவு 11.20 மணிக்கு தன்னுடைய 78வது வயதில் மனோரமா காலமானார். அப்போது முதல்வராக இருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, "என்னுடைய மூத்த சகோதரி இன்று காலமானார். என்னை அம்மு என்று செல்லமாக அழைக்கும் வெகு சில நபர்களில் அவரும் ஒருவர். சிவாஜி கணேசன் நடிகர் திலகம் என்றால் சாவித்திரிக்கு அடுத்தபடியாக மனோரம்மா தான் நடிகையர் திலகம்" இன்று புகழாரம் சூட்டினார்.
உடன்பிறப்புகளோடு அஜித் மனைவி ஷாலினி கொண்டாடிய தீபாவளி! வைரலாகும் புகைப்படம்!